பத்ரிநாத் டூ சபரிமலை: 8,000 கிலோமீட்டர்... 223 நாட்கள்... - இருமுடியோடு நடந்து வந்த இரு பக்தர்கள்!
செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
கேரள மாநிலம் காஸர்கோடு மாவட்டம் ராம்தாஸ் நகரைச் சேர்ந்த சனத்குமார் நாயக் மற்றும் சம்பத்குமார் ஷெட்டி ஆகிய இரு ஐயப்ப பக்தர்களும் கடந்த மே 26ம் தேதி காசர்கோட்டில் இருந்து ரயிலில் பத்ரிநாத் சென்றடைந்தனர். இதையடுத்து ஜூன் 2 ஆம் தேதி பத்ரிநாத்தில், சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். இதைத் தொடர்ந்து ஜன 3 ஆம் தேதி இருமுடியோடு உலக அமைதிக்காக பத்ரிநாத்தில் இருந்து சபரிமலைக்கு தங்கள் பாத யாத்திரையை துவக்கினர்.
பத்ரிநாத்தில் இருந்து வரும் வழியில் அயோத்தி, உஜ்ஜயினி, துவாரகை, பூரி ஜெகந்நாதர் கோயில், ராமேஸ்வரம், சங்கராச்சாரியார் நிறுவிய நான்கு மடங்கள் உள்ளிட்ட பல்வேறு புனித தலங்கள் மற்றும் கோயில்களைப் பார்வையிட்டனர். பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் தங்கி, உள்ளூர் உணவுகளையும், சில இடங்களில் சமைத்து உண்டும் கால்நடை பயணத்தை தொடர்ந்தனர்
இந்நிலையில், கடந்த 223 நாட்கள் 8,000 கிலோ மீட்டர் பாதயாத்திரையாக இன்று சபரிமலை சன்னதிக்கு வந்த சனத்குமார் நாயக் மற்றும் சம்பத்குமார் ஷெட்டி ஆகியோருக்கு சபரிமலை சிறப்பு அதிகாரி பிரவீன் மற்றும் உதவியாளர் ஆகியோர் ஐயப்பன் தீர்த்தம் வழங்கி அவர்களது பாத யாத்திரையை நிறைவு செய்து வைத்தனர்.
இதைத் தொடர்ந்து சாமி தரிசனம் செய்த அவர்கள் இருவருக்கும் சபரிமலை ஐயப்பன் விக்ரகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.