மதுரை| மீனாட்சி கல்யாணத்தை பார்த்தாலே போதும்.. ’அடுத்த வருடம் நிச்சயம் கல்யாணம் நடக்கும்’!
மதுரை மீனாட்சி–சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் உலகையே வியக்க வைக்கும் பிரம்மாண்ட திருமணமாக ஆண்டுதோறும் கோலாகலமாக நடக்கிறது. பச்சை பட்டு ஆடை, வைர கிரீட அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருள, முப்பத்தி முக்கோடி தேவர்கள் சூழ்ந்த தெய்வீக சூழலில் சடங்குகள் நடந்தன. இந்த தரிசனம் கிடைத்தால் அடுத்த வருடம் வீட்டில் சுபநிகழ்ச்சிகள், திருமண வரங்கள் கிடைக்கும்.
'கன்னிகா தானம்'
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவின் 10ஆம் நாள் நிகழ்வில், அதிகாலையிலேயே அன்னை மீனாட்சியும், சுந்தரேஸ்வரப் பெருமானும் மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.
மங்கல இசை முழங்க, வேத மந்திரங்கள் ஓத, அக்னி சாட்சியாக சடங்குகள் நடைபெற்றன. மணமக்களுக்கு முறைப்படி காப்பு கட்டப்பட்டு, வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அன்னை மீனாட்சியை, பவளக்கனிவாய் பெருமாள் தாரை வார்த்துத் தரும் 'கன்னிகா தானம்' நெகிழ்ச்சியுடன் நடைபெற்றது.
திருக்கல்யாணத்தை நேரில் பார்த்தால் உடனே திருமணம் நடக்கும்
இதையடுத்து, மங்கல நாண் சூட்டப்பட்ட போது, கோயிலைச் சுற்றி திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் பக்தி முழக்கமிட்டு மலர் தூவி வழிபட்டனர். மேலும் பெண்கள், தங்கள் தாலிச் சரடைப் புதிய மஞ்சள் கயிற்றிற்கு மாற்றிக்கொண்டனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பல்லாயிரக்கணக்கானோருக்குத் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது. முன்னதாக, பெரிய திரைகளில் திருக்கல்யாண நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
இந்த திருக்கல்யாணத்தை நேரில் சென்று பார்த்தால் அடுத்த ஒருவருடத்தில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் என நம்பப்படுகிறது. திருமணம் ஆகாமல் நீண்ட நாட்களாக இருப்பவர்களுக்கு உடனே திருமணம் நடக்கும். திருமணமானவர்களுக்கு எப்போதும் சுமங்கலியாக இருக்கும் வரம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது..
பிரம்மாண்டமாக, நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
அதுமட்டுமல்லாமல் உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு முதன் முதலாக இந்த பிரபஞ்சத்தில் பிரம்மாண்டமாக, நடந்த திருமணம் என்றால் அது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமாகும். அத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த திருமணம் முப்பத்தி முக்கோடி தேவர்கள் சூழ, பிரம்மா மற்றும் மகா விஷ்ணு இணைய மதுரை மாநகர் மொத்தமும் ஸ்தம்பித்து நிற்கும்படி ஒவ்வொரு வருடமும் நடக்கும்..
இந்த திருகல்யாணத்தின்போது மீனாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தி, மாணிக்க மூக்குத்தி மற்றும் வைர கிரீடத்தை அணிந்திருந்தார். திருமணத்தில் செய்யப்படும் அனைத்து சடங்குகளும் ஒவ்வொன்றாக நடந்தது.. திருமண மேடை முழுக்க மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது..
தமிழகம் முழுவதும் நடந்த திருக்கல்யாண உற்சவம்..
செவ்வாய்க்கிழமையான (ஏப்ரல் 28ஆம் தேதி) நேற்று காலை 08.35 முதல் 08.59 வரையில் திருக்கல்யாண முகூர்த்தம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. அப்படி மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் நடக்கும் போது அங்கு வந்திருந்த சுமங்கலி பெண்கள் அனைவரும் தங்களது தாலிக் கயிறை மாற்றிக்கொண்டனர்.. அத்துடன் அம்பாளையும் சுந்தரேஸ்வரரையும் மனதார கையெடுத்து கும்பிட்டு வழிபாடு செய்தனர்..
மேலும் இந்த திருக்கல்யாணம் மதுரை மட்டுமின்றி, சேலம் அண்ணாமலையார், தூத்துக்குடி சொக்கலிங்கசுவாமி மற்றும் மானாமதுரை சோமநாதர் கோவில்களிலும் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் புது மாங்கல்யம் மாற்றியும், பாரம்பரிய விருந்துடன் விழாவைக் கொண்டாடினர்.

