மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சம் என்ன தெரியுமா..? தெரிந்துகொள்ள வேண்டிய சிறப்புகள்!
உலகம் முழுவதும் பக்தர்களை ஈர்க்கும் மதுரை சித்திரை திருவிழா, சைவ-வைணவ ஒற்றுமையின் சின்னமாக ஒரு மாதம் கோலாகலமாக நடைபெறுகிறது. முதல் 15 நாட்கள் மீனாட்சி அம்மனுக்கும், அடுத்த 15 நாட்கள் கள்ளழகருக்கும் அர்ப்பணிக்கப்படும் இந்த விழாவில் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகை எழுந்தருளல் போன்ற வைபவங்கள் மதுரையை விழாக்கோல நகரமாக மாற்றுகின்றன.
சித்திரை மாதம் என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மதுரை சித்திரை திருவிழாதான்.. பொதுவாக சித்திரையில் தமிழகம் முழுவதிலும் சில முக்கியமான கோயில்களில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த மதுரை சித்திரை திருவிழா ரொம்பவே விஷேசமானது.. பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த திருவிழா சைவ, வைணவ ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கிறது என்றே சொல்லலாம்..
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த மதுரை சித்திரை திருவிழா சுமார் ஒரு மாதம் வரை நடைபெறும்.. இதில் முதல் 15 நாட்கள் மீனாட்சி அம்மனுக்கும், அடுத்த 15 நாட்கள் அழகருக்கும் திருவிழா கோலாகமாக நடத்தப்படும்.. இந்த ஒரு மாத காலமும் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.. இந்த திருவிழாவை பார்த்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்ய உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் அலை அலையாக வருவார்கள்.. உலகமே கொண்டாடும் இந்த திருவிழாவின் சிறப்புகள் மற்றும் வரலாறு பற்றி இக்கட்டுரையில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
பொதுவாக ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் இந்த விழாவில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் மற்றும் சிவனின் அவதாரமான சுந்தரேஸ்வரருக்கும், பார்வதியின் அம்சமான மீனாட்சி அம்மனுக்கும் நடக்கும் தெய்வீக திருமணமும் மிக முக்கியமானது. இத்தகைய சிறப்பான இந்த மீனாட்சி திருக்கல்யாணத்தைக் காண அழகர் மலையில் இருந்து கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் வந்து வைகை ஆற்றில் இறங்கி, தங்களுடைய தங்கை மீனாட்சியின் திருமணத்தை சிறப்பிப்பார்.
அதன் பிறகு மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் தனித்தனி தேர்களில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். இதனால் மதுரையே விழாக்கோலம் பூண்டு, திரும்பும் திசையெங்கும் மக்கள் வெள்ளம், வழிநெடுகிலும் அன்னதானம் என மக்கள் கொண்டாடுவார்கள்.. அதுமட்டுமல்லாமல் பக்தர்கள் தங்களின் குழந்தைகளுக்கு மீனாட்சி அம்மனின் வேடம் போட்டு அழகு பார்ப்பார்கள்..
பொதுவாக சிவாலயங்களில் சிவனுக்கு முதலிடம் அளிக்கப்படும், ஆனால் மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு முதல் சன்னதியும், முதல் பூஜையும் நடைபெறுகிறது. அத்துடன் மீனாட்சி அம்மன் சிலை மரகத கல்லால் ஆனது. இங்கு அன்னை மீனாட்சி தினமும் 8 விதமான சக்திகளாக பாவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறார் என்பது மிக முக்கியம்மான ஒன்றாக பார்க்கப்படுகிறது..
இந்த கோயிலில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் கோவில் வளாகத்திற்குள் இருக்கும் பொற்றாமரைக் குளம்தான். இது மிக பழமையான செவ்வக வடிவிலான குளம், இந்திரன் சிவனை வழிபட்ட இடமாகவும் புராணக்கதைகளில் சொல்லப்படுகிறது.. ஆயிரம் கால் மண்டபம், பிரம்மாண்டமான ராஜகோபுரங்கள் மற்றும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் நாயக்கர் கால கட்டிடக்கலைக்குச் சான்றாகும்.
மதுரை மீனாட்சி அம்மனை தரிசிப்பது மோட்சத்தை அளிக்கும் என்றும், இந்த தலம் பூலோக கைலாசம் என்றும் போற்றப்படுகிறது. இப்படி மதுரையின் அடையாளமாக, மதுரை நகரின் மையத்தில் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இந்த மீனாட்சி அம்மன் கோயில் ஆன்மீகம், வரலாறு, கலை, பண்பாட்டின் சின்னமாக இன்று வரை போற்றப்படுகிறது..

