ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் இருக்கு தெரியுமா? கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க!
சபரிமலை மண்டல, மகரவிளக்கு காலத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் ஐயப்பனுக்கு, கேரளாவில் தனித்துவமான அறுபடை வீடுகள் உள்ளன. இதுகுறித்து பலருக்கும் தெரியாத நிலையில் அது என்னென்ன கோயில்கள் என்பது குறித்தும் அவை, எங்கு உள்ளன என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
சபரிமலையில் மண்டல - மகரவிளக்கு பூஜைக்காக ஆண்டு தோறும் நடை திறக்கப்படுவது வழக்கம். அப்படி நடை திறக்கப்பட்டு சீசன் தொடங்கினாலே போதும், ஐயப்பனை பார்க்க பக்தர்களின் படையெடுப்பு பம்பையே திணறும் அளவிற்கு அதிகமாகக் காணப்படும். அத்தகைய பெருமைக்குரிய இந்த ஐயப்பனுக்கு அறுபடை வீடுகள் உண்டு என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு எப்படி அறுபடை வீடுகள் உள்ளதோ அதுபோலவே ஐயப்பனுக்கும் கேரளாவில் அறுபடை வீடுகள் உண்டு.
முதல் படை வீடு : ஆரியங்காவு
அதில் முதல் படை வீடு ஆரியங்காவு, இக்கோவில் கேரள மாநிலத்தில், கொல்லம் மாவட்டத்திலுள்ள ஆரியங்காவு எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோயில் உள்ளது. சபரிமலையில் பிரம்மச்சாரியாக உள்ள ஐயப்பன், இக்கோவிலில் புஷ்கலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்தவராகக் காட்சி தருகிறார். அத்துடன் மார்கழி மாதத்தில் நடைபெறும் 'மண்டல பூஜை' மற்றும் 'திருக்கல்யாண உற்சவம்' இங்கு மிகவும் பிரபலம்.
இரண்டாம் படைவீடு : அச்சன்கோவில்
2-வதாக அச்சன்கோவில், கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள ஐயப்பன் பூர்ணா, புஷ்கலா என்னும் இரண்டு மனைவிமாருடன் திருமண வாழ்க்கையை மேற்கொள்வதாகவும் நம்பப்படுகின்றது. அத்துடன் இந்த கோயில் பரசுராமனால் நிறுவப்பட்டதாகவும் இங்கு விஷப் பாம்பு தீண்டியவர்கள் வந்தால் உடனே குணமடைவர் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஐய்யப்பனின் இடது கையில் எப்போதுமே சந்தனமும் தீர்த்தமும் இருப்பதைக் காணலாம். இந்த தீர்த்தம்தான் விஷத்தை முறிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது..
மூன்றாம் படைவீடு : குளத்துப்புழா
3வதாக குளத்துப்புழா, ஐயப்பனின் முக்கியமான கோவில்களுள் இதுவும் ஒன்று. இங்கு, ஐயப்பன் குழந்தையாக காட்சி தருவதால் ’பால சாஸ்தா’ என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இக்கோயிலின் வாசலில் சிறு குழந்தைகள் நுழையும் அளவிற்கே இருக்கும். இக்கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள குளத்துப்புழை எனும் சிற்றூரில் அமைந்துள்ளது.
நான்காம் படைவீடு : எரிமேலி
4வதாக எரிமேலி, கேரளாவில் உள்ள இத்தலத்தில் ஐயப்பன் கைகளில் வில், அம்பு ஏந்தி வேடன் போன்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். எருமேலியும் கேரளாவிலேயே உள்ளது.
ஐந்தாம் படைவீடு: பந்தளம்
ஐந்தாவதாக பந்தளம், இந்தத் தலத்தில்தான் பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோயில் இங்கு உள்ளது. இங்கு சுவாமி ஐயப்பனுக்குரிய திருவாபரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. ’பந்தளம்’ என்பது ஐயப்பன் வாழ்ந்ததாகக் கருதப்படும் பந்தளம் அரண்மனை இருக்கும் இடம். இது அச்சன்கோவில் நதியின் கரையில் அமைந்துள்ளது.
ஆறாவது படைவீடு : சபரிமலை
ஆறாவது படைவீடாக சபரிமலை, கேரளாவில் உள்ள இத்தலத்தில் தர்ம சாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு யோக சின்முத்திரை தாங்கி கேட்ட வரம் கொடுப்பவராக காட்சி தருகிறார். சபரிமலைக்கு வரும் பக்தர்கள், ஐயப்பனின் அறுபடை வீடுகளான இந்த 6 கோயில்களுக்கும் சென்று வழிபட்டால் சீரும் சிறப்பும் பெற்று வாழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

