எதிரெதிர் துருவத்தில் ஒய்.எஸ்.ஆர் குடும்பம்; கடப்பா தொகுதி யாருக்கு? -அனல் தகிக்கும் ஆந்திர அரசியல்!

ஷர்மிளா வரும் தேர்தலில் கடப்பா மக்களவைத் தொகுதியில் களமிறங்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் இறுதி நிகழ்வாக மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஷர்மிளாவிடம், ராகுல்காந்தி இது குறித்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஜெகன் மோகன் ரெட்டி, ஷர்மிளா
ஜெகன் மோகன் ரெட்டி, ஷர்மிளாpt web

ஆந்திரபிரதேச தேர்தல்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவும், ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது.

ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும் 175 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலும் ஒரே கட்டமான மே 13-ம் தேதி நடைபெற உள்ளது. 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. எஞ்சிய 3 தொகுதிகளில் மட்டுமே சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றிருந்தது. ஒய்.எஸ்.ஆர்.சி.பி 49.9% வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், தெலுங்கு தேசம் 40.2% வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ மொத்தமாகவே 1.3% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.

மும்முனைப் போட்டி

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் தலைமையிலான கூட்டணியில், பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா இணைந்துள்ளன. 25 மக்களவைத் தொகுதிகளில், தெலுங்கு தேசம் 17 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும், ஜனசேனா 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 175 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், 144 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியும், 10 சட்டமன்ற தொகுதிகளில் பாஜகவும், 21 சட்டமன்ற தொகுதிகளில் ஜனசேனாவும் போட்டியிடுகின்றன. தெலுங்கு தேசம் கூட்டணி, வேட்பாளர்கள் அறிவிப்புகளிலும் வேகம் காட்டி வருகிறது.

மறுபுறம் ஜெகன்மோகன் சகோதரியான, ஒய்.எஸ்.ஷர்மிளா சமீபத்தில் ஆந்திர பிரதேசம் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான INDIA கூட்டணியில் சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இந்நிலையில் ஷர்மிளா வரும் தேர்தலில் கடப்பா மக்களவைத் தொகுதியில் களமிறங்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் இறுதி நிகழ்வாக மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஷர்மிளாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இது குறித்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மாநிலத்தில் ஆளும் மற்றும் வலுவான கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. ஆட்சியின் எதிர்ப்பலை வாக்குகள் அதிகமிருப்பதால் சிட்டிங் எம் எல் ஏ, எம்பிக்களை இடம் மாற்றியும், புதியவர்களுக்கு வாய்ப்பளித்தும் தேர்தலை சந்திக்கிறது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி.

கடப்பா - ஒய்.எஸ்.ஆர் கோட்டை

கடப்பா மக்களவைத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பத்தைச் சேர்ந்த அவினாஷ் ரெட்டி போட்டியிடுகிறார். கடப்பா மக்களவைத் தொகுதி என்பது ஒய்.எஸ்.ஆர் குடும்பத்தின் கோட்டையாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், ராஜசேகர ரெட்டி இத்தொகுதியில் 4 முறை எம்பியாக இருந்தவர். அதற்கு பிறகு அவரது இளைய சகோதரர் விவேகானந்த ரெட்டி அத்தொகுதியில் வெற்றி பெற்றார். அவருக்கு பிறகு 2009 ஆம் ஆண்டு தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டி அத்தொகுதியில் இருந்து எம்பியானார். 2010-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர், 2011 மே மாதத்தில் நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.பி ஆனார். ஜெகன்மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கியப் பின், அக்கட்சியின் சார்பில் அவினாஷ் ரெட்டி 2014 மற்றும் 2019 என இருமுறை எம்பியாக இருந்துள்ளார். இந்நிலையில் அவினாஷ் ரெட்டிக்கு எதிராக ஷர்மிளா காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்படலாம் என தெரிகிறது.

ஆனால், அந்தத் தொகுதியில் காங்கிரஸ் மிக பலவீனமாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில், கடந்த தேர்தலில், அவினாஷ் ரெட்டி 7 லட்சத்து 83 ஆயிரம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடம் பிடித்த தெலுங்கு தேசம் கட்சியின் நாராயண ரெட்டி 4 லட்சத்து 2 ஆயிரத்து 773 வாக்குகளைப் பெற்றார். ஆனால் மூன்றாவது இடம் பிடித்த காங்கிரஸ் கட்சியோ மொத்தமாகவே 8 ஆயிரத்து 341 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.

கடப்பா மக்களவைத் தொகுதியில் மொத்தமாக 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் புலிவெந்துலா தொகுதியும் ஒன்று. இதுவும் ஒய்.எஸ் ராஜசேகர் ரெட்டி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிதான். 7 சட்டமன்ற தொகுதிகளிலுமே கடந்த தேர்தல்களில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது.

கடப்பா மக்களவைத் தொகுதி ஒய் எஸ் ஆர் குடும்பத்தின் கோட்டை. அதேசமயத்தில் ஷர்மிளாவும் ஒய் எஸ் ஆர் வாரிசு என்பதால் போட்டி பலமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com