பாராகிளைடிங்கில் பறந்த இருவர்... சுற்றுலாவில் நேர்ந்த சோகம்!
வானில் பறக்க வேண்டும் என்ற விருப்பம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால், அந்த விருப்பமே கடைசி விருப்பமாக மாறினால்... இதுப்போன்றுதான், புனேவை சேர்ந்த பெண் ஒருவருக்கு நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசித்துவருபவர் 27 வயதான ஷிவானி டேபிள்.. இவர் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே வானில் பறந்து சாகசம் செய்யும் பாராகிளைடு பயணத்தை கண்ட ஷிவானிக்கு ஆர்வம் அதிகமாக, தானும் அதில் பயணம் செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளார்.
எனவே, வடக்கு கோவாவில் உள்ள பாராகிளைடிங் நிறுவனத்தை தொடர்புகொண்டு அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளார். இதனையடுத்து, நோபாள நாட்டை சேர்ந்த பயிற்சியாளரான சுமால் (26) என்பவரின் உதவியுடன் ஷிவானி பறக்க தொடங்கியுள்ளார்.
ஆனால், அவர்கள் பறந்த சிறுது நேரத்திலேயே சரியாக மாலை 5 மணியளவில் கெரி பீடபூமியில் பாராகிளைடின் கயிறு அறுந்து விழுந்துள்ளது. இதனால், சுற்றுலா பெண், பயிற்சியாளர் என இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், சனிக்கிழமை மாலையில் இந்த விபத்து நடந்ததாகவும், பாராகிளைடிவ் சேவை வழங்கிய நிறுவனம் அனுமதியின்றி இயங்கியதும் தெரியவந்துள்ளது.
இதன்பின்னர், மனித உயிருக்கு ஆபத்து விளைவித்ததற்காக பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடர்புடைய விதிகளின் கீழ் நிறுவனத்தின் உரிமையாளர் சேகர் ரைசதா மீது மாண்ட்ரெம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.