bjp and congress
bjp and congressface book

தனிப்பெரும்பான்மை பெறாத பாஜக... மத்தியில் ஆட்சி அமைப்பதை காங்கிரஸால் தடுக்க முடியுமா?

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அக்கட்சி ஆட்சி அமைப்பதை காங்கிரசால் தடுக்க முடியுமா? காங்கிரஸ் முன் இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்க தேவையான இடங்களை கொண்டுள்ளது. அதேநேரத்தில், I.N.D.I.A. கூட்டணியும் 230-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி இருக்கிறது. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவைப்படும் நிலையில் அரசமைக்க விரும்பினால் தேசிய ஜனநாயக கூட்டணியை உடைப்பதை தவிர காங்கிரசுக்கு வேறு வழியில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மற்றும் யாருடனும் கூட்டணி அமைக்காத ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 32 இடங்களில் வென்றுள்ளன.

அக்கட்சிகளை தன் கூட்டணியில் இணைக்க காங்கிரஸ் முயற்சிக்கலாம். அதேநேரத்தில், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவரான கே.சி. தியாகி, தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு தாங்கள் விலகப் போவதில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த 3 கட்சிகள் இணைந்தாலும் I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது.

bjp and congress
மக்களவை தேர்தல் 2024 முடிவுகள் | 40க்கு 40 சொல்லியடித்த திமுக!

அதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் மேலும் பல சிறிய கட்சிகளையும் I.N.D.I.A. கூட்டணியில் இணைக்க வேண்டிய சூழல் காங்கிரசுக்கு ஏற்படும். இதனிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் டெல்லியில் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கின்றனர். இதில், கூட்டணி கட்சிகள் பாஜகவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துவிட்டால், மோடி மீண்டும் பிரதமராவதை காங்கிரசால் தடுக்க முடியாது.

அதேநேரத்தில், I.N.D.I.A. கூட்டணித் தலைவர்களும் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். இந்த கூட்டத்தில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளை அணுகுவது குறித்து கூட்டணி கட்சிகளிடம் ஆலோசிக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதையடுத்து தேசிய அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. என்ன நடக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்...!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com