ஜார்க்கண்ட்|சோதனைகளை முறியடித்து ஹேமந்த் சோரன் வெற்றிக்கொடி..பாஜக சறுக்கியதற்கு 5 முக்கிய காரணங்கள்!
ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக கடந்த நவம்பர் 13ஆம் தேதி, 43 தொகுதிகளுக்கும் தொடர்ந்து 2வது கட்டமாக, நவம்பர் 20ஆம் தேதி 38 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், இந்த மாநிலத்திற்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்றது. அதன்படி, தற்போது வரை ஆளும் ஜேஎம்எம் கூட்டணி 57 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 23 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம், மீண்டும் ஜேஎம்எம் கூட்டணியே ஆட்சியமைக்கும் என உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக தேர்தலில் தோல்வியைச் சந்திப்பதற்கும், ஆளும் ஜே.எம்.எம். கூட்டணி வெற்றியைத் தக்க வைப்பதற்கும் சில முக்கியக் காரணங்கள் கூறப்படுகின்றன. அதுகுறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
பாஜக தோல்வியைச் சந்திக்க 5 காரணங்கள்
1. அனுதாப அலை..
பணமோசடி வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரன், மத்திய பாஜக அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டது இந்த தேர்தலில் எதிர்வினையாற்றியுள்ளது. ஒருவிதமான அனுபாத அலை அவருக்கு கைகொடுத்துள்ளது. மேலும், பிரசாரத்தின்போது பாஜக தலைவர்கள் ஆளும் அரசின் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தனர். ஆனால், மக்கள் மத்தியில் அவை எதுவும் எடுபடவில்லை
2. அமக்கலாக்கத்துறை சோதனைகள்..
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள தலைவர்களின் வீடுகளில் மத்திய புலனாய்வு அமைப்புகள் அடிக்கடி சோதனை மேற்கொண்டதும் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. எடுபடாத ‘ஊடுரூவல்’ குற்றச்சாட்டு!
பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் பிரசாரத்தின்போது (பிரதமர் நரேந்திர மோடி முதல் ஜார்கண்ட் பாஜக இணை பொறுப்பாளர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வரை) வங்காளதேச ஊடுருவல் பிரச்னையை எழுப்பினர். பாஜக ஆட்சிக்கு வந்தால் பங்களாதேஷ் முஸ்லிம்களை நாடு கடத்துவோம் எனக் கூறியதும், இந்த தேர்தலில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
4. பழங்குடியின முதல்வர் முகம் இல்லை!
இந்த தேர்தலில், ஆளும் கூட்டணிக்கு எதிராக பாஜக பரிச்சயமான எந்த முதல்வர் வேட்பாளரையும் அடையாளப்படுத்தத் தவறிவிட்டது. பழங்குடியினரின் முகமாக, யாராவது நன்கு அறிமுகமான ஒருவரை அடையாளப்படுத்தியிருந்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசித்திருக்கும். ஜார்க்கண்டில் முண்டா போன்ற 32 பழங்குடியினர் குழுக்கள் உள்ளன. பழங்குடியினரின் அடிப்படை உணர்வை, பாஜக புரிந்துகொள்ளத் தவறிவிட்டது. பழங்குடியின முதல்வர் என்ற வாக்குறுதியையும் கொடுக்க தவறிவிட்டது.
5. ஜே.எம்.எம் கட்சி தலைவர்களை பாஜகவுக்கு இழுத்தது!
ஹேமந்த் சோரனின் மைத்துனி சீதா சோரன் முதல் ஜார்கண்ட் முன்னாள் முதலவர் சம்பாய் சோரன் எனப் பலரையும் பாஜக தன் கட்சியில் இணைத்தபோதும், அவர்களுடைய வாக்குச் சதவிகிதத்தை அதிகரிக்கத் தவறிவிட்டது. அவர்கள், பாஜகவுக்குத் தாவியதே அந்த இன மக்களின் வாக்குச் சதவிகிதம் குறைவதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுமே அங்கு பெரிய அளவில் பிரசார உரை மேற்கொண்டனர். பழங்குடியின மக்களில் முக்கியத் தலைவர்கள் இல்லாதது ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
ஜேஎம்எம் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க காரணங்கள்
1. முதல்வர் ஹேமந்த் சோரனின் கைது, அம்மாநில மக்களுக்கு அனுதாபத்தை அள்ளித் தந்தது. அடுத்து அவர் சிறையில் இருந்தபோதும், கட்சியை வளர்க்கவும், ஆட்சியைத் தக்கவும் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் களமிறங்கினார். இது, அந்த கூட்டணிக்கு தேர்தலில் வலு சேர்த்துள்ளது.
2. ஜேஎம்எம் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள், குறிப்பாக முக்யமந்திரி மைய சம்மான் யோஜனா, மற்றும் ஆதிவாசி அஸ்மிதா (பழங்குடியினரின் பெருமை) பற்றிய தனது பிரசாரத்தை முன்னெடுத்தது. மையா சம்மான் யோஜனா தகுதியுள்ள பெண் பயனாளிகளுக்கு மாதம் ரூ 1,000 பெற உதவுகிறது.
3. ஆளும் கட்சி, பழங்குடியின அடையாளம், மாநிலம் உரிமைகள், ஆகியவற்றை முன்னிறுத்தி தனது பிரசாரத்தை மேற்கொண்டது. அதுவும் இந்த தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது.
4. பெண் வாக்காளர்களின் வலுவான ஆதரவால் ஜேஎம்எம் வெற்றி பெற்றுள்ளது. ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், முக்கியமாக பழங்குடியின பெண்களிடையே நன்கு பரிச்சயமானார். அவர்களிடம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முகமாகவே மாறினார்.
முன்னதாக, தேர்தல் ஆரம்பித்த நாள் முதல் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + காங்கிரஸின் I-N-D-I-A கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. I-N-D-I-A கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) 41 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 6 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) 4 இடங்களிலும் போட்டியிட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 68 இடங்களிலும், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏஜேஎஸ்யு) 10 இடங்களிலும், ஜனதா தளம் (ஐக்கிய) 2 இடங்களிலும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 1 இடத்திலும் போட்டியிட்டன.