தேர்தல் தோல்வி | உடையும் TMC.. வெளியேறிய மம்தாவின் நெருங்கிய கூட்டாளி!
மேற்கு வங்கத் தேர்தலில் பலத்த தோல்வியடைந்த திரிணாமுல் காங்கிரஸ் சமீபகாலமாக உட்கட்சிப் பூசலை எதிர்கொண்டு வருகிறது. திரிணாமூல் காங்கிரஸின் பராசத் நாடாளுமன்ற உறுப்பினரும், மம்தா பானர்ஜியின் நீண்டகால கூட்டாளியுமான ககோலி கோஷ் தஸ்திதாரும் வைத்திருப்பது அக்கட்சியின் உட்கட்சிப் பூசலை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு, முதன்முறையாக பாஜக அரசு அமைத்துள்ளது. அக்கட்சியின் முதல்வராக பதவியேற்ற நிலையில் சுவேந்து அதிகாரி, தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார். இதற்கிடையே, தேர்தலில் பலத்த தோல்வியடைந்த திரிணாமுல் காங்கிரஸ் சமீபகாலமாக உட்கட்சிப் பூசலை எதிர்கொண்டு வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ஐ-பிஏசி என்ற அரசியல் ஆலோசனை நிறுவனமே காரணம் என கல்யாண் பானர்ஜி மற்றும் ரிஜு தத்தா போன்ற கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
மேலும், மம்தா பானர்ஜியும் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜியும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் கருத்துக்கள விட ஐ-பிஏசியின் ஆலோசனைகளுக்கே தொடர்ந்து முன்னுரிமை அளித்து வந்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில், இதே குற்றச்சாட்டை திரிணாமூல் காங்கிரஸின் பராசத் நாடாளுமன்ற உறுப்பினரும், மம்தா பானர்ஜியின் நீண்டகால கூட்டாளியுமான ககோலி கோஷ் தஸ்திதாரும் வைத்திருப்பது அக்கட்சியின் உட்கட்சிப் பூசலை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ள அவர், திரிணாமூல் காங்கிரஸின் படுதோல்விக்கு, அக்கட்சிக்குள் நிலவும் நிர்வாக சீர்கேடு மற்றும் ஐ-பிஏசி-யே காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், ‘சமீபகாலமாக மேற்கு வங்கத்தில் நடந்த சில அதிர்ச்சியூட்டும் குற்ற மற்றும் ஊழல் சம்பவங்கள் , சாமானிய மக்களின் மனதில் இயல்பாகவே கேள்விகளையும் அச்சங்களையும் எழுப்பியுள்ளன. ஜனநாயகத்தை வலுப்படுத்த, அரசியலில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், அர்ப்பணிப்பு, கண்ணியம், மக்கள் மீதான பொறுப்பு மற்றும் விழுமியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது அவசியம்’ என அதில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், விரைவில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது.
மக்களவையில் திரிணாமூல் காங்கிரஸின் தலைமைக் கொறடாவாக செராம்பூர் எம்.பி. கல்யாண் பானர்ஜியை மம்தா நியமித்த நாள் முதலே, இவ்விவகாரம் அவர்கள் இருவருவருக்கும் இடையே (மம்தா -கோஷ் தஸ்திதார்) நீருபூத்த நெருப்பாக இருந்துவந்ததாகவும், அது தேர்தல் தோல்விக்குப் பிறகு தற்போது பெரிய அளவில் வெடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

