மேற்கு வங்கம் | இடம் மாறும் தலைமைச் செயலகம்.. காரணம் இதுதான்!
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரசில் தலைமைச் செயலகமாக செயல்பட்ட 'நபன்னா' கட்டடத்திற்குப் பதிலாக, பாரம்பரியமிக்க ரைட்டர்ஸ் பில்டிங்கில் இருந்து செயல்பட புதிய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
கொல்கத்தாவின் பாரம்பரியமிக்க ரைட்டர்ஸ் பில்டிங், சுதந்திரத்துக்குப் பின்னர் மேற்கு வங்க அரசின் தலைமைச் செயலகமாகச் செயல்பட்டு வந்தது. ஆனால், மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகள் கழித்து 2013ஆம் ஆண்டில் ஹவுரா மாவட்டம் நபன்னா கட்டடத்தில் இருந்து தலைமைச் செயலகம் செயல்பட்டுவருகிறது.
இந்த நிலையில், மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா, ’தாங்கள் ரைட்டர்ஸ் பில்டிங்கிலிருந்து அரசை நடத்துவோம் என்று 2021ஆம் ஆண்டு முதலே கூறிவருகிறோம்’ என்று கூறியிருக்கிறார். கொல்கத்தாவின் மையப்பகுதியான பி.பி.டி பாக்கில் சிவப்பு நிற அடையாளமாக அமைந்துள்ள ரைட்டர்ஸ் கட்டடத்துக்கு தலைமைச் செயலகத்தை மீண்டும் மாற்றுவது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட முடிவு என்று பாஜக தரப்பில் கூறப்படுகிறது. ரைட்டர்ஸ் பில்டிங்கில் உடனடியாக 2 பிளாக்குகளில் இருந்து புதிய பாஜக அரசு தன் பணியைத் தொடங்கும் என தெரிகிறது.

