துர்கா தேவிக்கு 11 கைகள்.. அரசு வெளியிட்ட விளம்பரம்.. சர்ச்சையில் சிக்கிய பாஜக!
துர்கா பூஜை முன்னேற்பாடுகள் தொடர்பாகக் கொல்கத்தாவில் உள்ள 'மிலன் மேளா' திடலில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்காக நாளிதழ்களில் அரசு சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்த விளம்பரத்தில், வழக்கமான 10 கரங்களுக்குப் பதிலாக 11 கரங்களுடன் துர்கை அம்மனின் படம் அச்சிடப்பட்டு வெளியாகி இருந்தது. அதாவது 'தசபுஜை' (10 கரங்கள்) கொண்ட துர்கா தேவியின் உருவப்படத்தில், கூடுதல் ஆயுதத்துடன் 11-ஆவது கை அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாஸ்திரங்களின்படி, 10 கரங்கள் கொண்ட துர்கை அம்மன், அரசு விளம்பரத்தில் எவ்வாறு 11 கரங்களுடன் மாறினார் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஷ் கேள்வி எழுப்பியதுடன், வங்காளப் பண்பாட்டையும் சமயக் கோட்பாடுகளையும் அரசு தவறாகச் சித்தரித்துள்ளது என சாடியுள்ளார்.
அதேபோல், சிபிஎம் தலைவர் சதரூப் கோஷ், ”அசுரனை வதைக்கக் கடவுள்கள் 10 கரங்களை வழங்கிய நிலையில், அரசு அம்மனுக்குக் கூடுதலாக ஒரு கையைப் பரிசளித்துள்ளது” எனக் கிண்டலடித்துள்ளார். இது, பரவலாக மாநிலம் முழுவதும் விமர்சனத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில் பாஜக விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் சமிக் பட்டாச்சார்யா, “இது விளம்பர வடிவமைப்பில் ஏஜென்சி செய்த தவறு மட்டுமே. இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை” எனத் தெரிவிதுள்ளார். ஆனால், இவ்விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி மன்னிப்பு தெரிவித்துள்ளார். எதிர்பாராமல் நடந்த இந்தத் தவறுக்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருப்பதுடன், விளம்பரத்தை வடிவமைத்த துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இனி இத்தகைய தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

