மேற்கு வங்கம் | இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தீவிரம்.. திரிணாமுல் - பாஜகவினர் இடையே கல்வீச்சு!
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடந்த நிலையில், 142 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியிருக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவில், மேற்கு வங்கத் தேர்தல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக சுமார் 93.2 சதவீத வாக்குகள் பதிவானது. இந்தநிலையில் தான், இன்றும் அதிகப்படியான வாக்குப்பதிவு எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, மேற்கு வங்கத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக, காங்கிரஸ் மற்றும் சிபிஎம் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி இடையே 4 முனைப் போட்டி நிலவிவருகிறது. 2011 முதன்முறையாக, மேற்குவங்கத்தின் ஆட்சியை மம்தா பானர்ஜி கைப்பற்றியதன் மூலம், 34 ஆண்டுகால இடது சாரி முன்னணியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார். அன்றிலிருந்து இன்று வரை மேற்கு வங்கத்தின் முதல்வராக 3 தேர்தெடுக்கப்பட்டுள்ள மம்தா, 4-வது முறையாக முதல்வராகும் நோக்கில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அதேசமயம், முதலில் எதிர்கட்சியாவது பிறகு ஆட்சியைப் பிடிப்பது என்ற நோக்கில் மேற்குவங்கத்தில் செயல்பட்டு வந்த பாஜக, 2011 வெறும் 4.06 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. தொடர்ந்து, 2016 தேர்தலில் 3 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக, 2021 தேர்தலில் 77 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சியாக விருக்கிறது. இந்த சூழலில் தான், மேற்கு வங்கத் தேர்தலில் வெற்றி பெற்று யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பதில் கடும் போட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிருவிவருகிறது.
இந்தசூழலில் தான், இன்று நடைபெற்று வரும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும், ஹவுரா, தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் நாடியா உள்ளிட்ட மாவட்டங்களில் ஆளுங்கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே மோதல்கள் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, ஹவுரா மாவட்டத்தின் பாலி தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குவாதம் தொடங்கி, பின்னர் அது மோதலாக மாறியது. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்டனர். இதில், மத்தியப் படையினர் தலையிட்டு கூட்டத்தைக் கலைத்தனர்.
அதேபோல் நாடியா மாவட்டத்தின் சாப்ரா பகுதியில் உள்ள 53-வது வாக்குச்சாவடியில், இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ISF) முகவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அவர் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பாகர் பகுதியில் வாக்காளர்களை மிரட்டுவதாகப் புகார்கள் எழுந்தன. அங்குள்ள ஒரு கிராம பஞ்சாயத்து தலைவர் வாக்காளர்களை மிரட்டும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
வன்முறைச் சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்தியப் படைகள் பாஜக-விற்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், அப்பாவி வாக்காளர்களை மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். வன்முறை பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. சுமார் 2,300-க்கும் மேற்பட்ட துணை ராணுவ படை கம்பெனிகள் பாதுகாப்பு பணியில் இருந்தும், இத்தகைய மோதல்கள் அரங்கேறியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறைகளுக்கு மத்தியிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். காலை 11 மணி நிலவரம் படி 142 தொகுதிகளில் 39.97 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

