மக்களவையில் நிறைவேறிய வக்ஃப் திருத்த மசோதா | முக்கியமான அம்சங்கள் என்ன?
வக்ஃப் வாரியத்தில் பல்வேறு மாற்றங்களை சட்டத்தில் மேற்கொள்ளும் வகையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது. மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது. ஆனால், எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இந்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு INDIA கூட்டணிக் கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், விவாதத்தில் பங்கேற்று தங்களின் கருத்துகளையும் பதிவு செய்தனர். வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் மக்களவையில் இந்த மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும் அதற்கு எதிராக 232 வாக்குகளும் பதிவாகின.
இந்த நிலையில், வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவில் கூறப்பட்டிருக்கும் அம்சங்கள் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
எந்தவொரு சட்டத்தின் கீழும் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைகள் இனி வக்ஃப்களாக கருதப்படாது.
வக்ஃப் தீா்ப்பாயங்கள் வலுப்படுத்தப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட தோ்வு நடைமுறை பராமரிக்கப்படும்.
வக்ஃப் வாரியங்களுக்கு வக்ஃப் அமைப்புகளால் வழங்கப்படும் கட்டாய பங்களிப்பு 7 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.
ரூ.1 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் வக்ஃப் அமைப்புகள், அரசால் நியமிக்கப்படும் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்படும்.
வக்ஃப் சொத்து மேலாண்மையில் திறன்-வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த மையப்படுத்தப்பட்ட வலைதளம் உருவாக்கப்படும்.
இஸ்லாத்தை ஏற்று பின்பற்றுவோா் (குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்) மட்டுமே தங்களின் சொத்துகளை வக்ஃப்-க்கு அா்ப்பணிக்க முடியும்.
வக்ஃப் நன்கொடைக்கு முன்பாக நன்கொடையாளரின் பெண் வாரிசுதாரா்களுக்கு சொத்துரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.
அரசு சொத்துகள் வக்ஃப் சொத்தாக உரிமை கோரப்பட்டால் மாவட்ட ஆட்சியருக்கு மேற்பட்ட அந்தஸ்து கொண்ட அதிகாரி விசாரிப்பாா். பிரச்னை எழும் பட்சத்தில், அரசு உயரதிகாரியே இறுதி முடிவெடுப்பாா் (இப்போது வக்ஃப் தீா்ப்பாயங்கள் முடிவெடுக்கின்றன).
மத்திய-மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் இடம்பெறுவா்.
வக்ஃப் பிரகடனத்திற்கு முன்பு பெண்கள் தங்கள் வாரிசுரிமையைப் பெற வேண்டும், விதவைகள், விவாகரத்து பெற்ற பெண்கள் மற்றும் அனாதைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.