கலைந்த கர்ப்பம்.. திட்டிய கணவன்.. வீடியோ பதிவு செய்து உயிரைவிட்ட மனைவி!
உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத்தைச் சேர்ந்தவர் அம்ரீன் ஜஹான் (23). இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவரது கணவர் பெங்களூருவில் வெல்டராக வேலை பார்த்து வரும் நிலையில், அம்ரீன் ஜஹான், கணவரின் உறவினர்களுடன் வசித்து வந்தார்.
இதனிடையே, அம்ரீன் ஜஹானுக்கு சமீபத்தில் எதிர்பாராத விதமாக கர்ப்பம் கலைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், அம்ரீன் ஜஹான் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக வீடியோ ஒன்றை அவர் பதிவுசெய்துள்ளார். அதில், “தன்னுடைய கர்ப்பம் கலைந்ததற்கு தனது தவறான உணவு பழக்கவழக்கங்கள்தான் காரணம் என கணவரின் சகோதரி கதீஜாவும், மாமனார் ஷாகித்தும் என்னைக் குற்றஞ்சாட்டுகின்றனர். அவர்களோடு எனது கணவரும் சேர்ந்துகொண்டு தன்னை திட்டுகிறார். 'நீ ஏன் சாகக்கூடாது' என கணவரே கேட்கிறார். மேலும், என் மீதுதான் அனைத்து தவறும் இருப்பதாக கணவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகிறார்கள்.
எனது மருத்துவச் சிகிச்சைக்காக பணம் செலவழித்து தவறு செய்துவிட்டதாக கூறுகிறார்கள். எனது மரணத்திற்கு கணவரின் தந்தை மற்றும் சகோதரிதான் காரணம். எனது கணவருக்கும் இதில் பாதி பங்கு உள்ளது. நான் இறந்தபிறகு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான், இப்போது இருப்பதைவிட நன்றாக இருப்பேன்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தனது தந்தை சலீமை தொடர்ப கொண்டு பேசிய அம்ரீன் ஜஹான், கணவரின் குடும்பத்தினரிடம் இருந்து தன்னை காப்பாற்றுமாறு கூறி அழுதுள்ளார். இதனால் சலீம் பதறிப்போய் தனது மகளை பார்ப்பதற்காக வந்துள்ளார். ஆனால் அதற்குள் அம்ரீன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சலீம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அம்ரீன் ஜஹானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக அம்ரீனின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.