uttarpradesh assembly bans gutkha pan masala
உத்தரப்பிரதேசம்எக்ஸ் தளம்

உ.பி. | சட்டமன்றத்தில் பான் மசாலா எச்சில் துப்பிய விவகாரம் - அதிரடியாக வந்த புதிய உத்தரவு

உத்தரப்பிரதேச சட்டமன்ற சபாநாயகர் சதீஷ் மஹானா, இன்றுமுதல் சட்டமன்ற வளாகத்திற்குள் குட்கா மற்றும் பான் மசாலாவுக்கு தடை விதிப்பதாக அறிவித்தார்.
Published on

உத்தப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச சட்டமன்றத்தின் பிரதான மண்டபத்தின் நுழைவாயிலில் கம்பளத்தின் மீது உறுப்பினர் ஒருவர் பான் மசாலாவைத் துப்பியிருந்தார். இதைக் காணொளி மூலம் கண்டுபிடித்த சபாநாயகர் சதீஷ் மஹானா அதிருப்தி தெரிவித்தார்.

இதையடுத்து அவரது பெயரைக் குறிப்பிடாத சபாநாயகர், “அந்த உறுப்பினர் யார் என்பது எனக்குத் தெரியும். காணொளி உள்ளது. ஆனால் நான் யாரையும் அவமதிக்கும் நோக்கம் இல்லாததால், பகிரங்கமாக யாருடைய பெயரையும் வெளியிட விரும்பவில்லை. அதைச் செய்த உறுப்பினர் என்னை வந்து சந்திக்க வேண்டும். இல்லையெனில் நான் அவரை வரவழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்" என எச்சரித்திருந்தார்.

மேலும், அவர் சம்பவ இடத்திற்குச் சென்று சுத்தம் செய்யும் பணியை நேரில் மேற்பார்வையிட்டதாகக் கூறியிருந்தார். தொடர்ந்து, அந்தக் கம்பளத்தை மாற்ற எச்சில் துப்பிய உறுப்பினரிடமிருந்து பணம் பெற வேண்டும் என சக உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரியிருந்தனர். இந்த நிலையில், உத்தரப்பிரதேச சட்டமன்ற வளாகத்திற்குள் குட்கா மற்றும் பான் மசாலாவுக்கு இன்றுமுதல் தடை விதிப்பதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “விதான் சபா வளாகத்தில் பான்-மசாலா மற்றும் குட்கா நுகர்வு உடனடியாக தடைசெய்யப்பட்டுள்ளது. எந்தவொரு நபரும் இந்த பொருட்களை உட்கொள்வது கண்டறியப்பட்டால், ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும், மேலும் விதிகளின்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என உத்தரவிட்டுள்ளார்.

சட்டமன்றத்திற்குள் தூய்மை மற்றும் ஒழுக்கம் குறித்த கவலைகளை எழுப்பிய எச்சில் துப்புதல் சம்பவத்திற்குப் பிறகு பரவலான சீற்றத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் இந்த நடவடிக்கை மாநிலத்தின் மிக உயர்ந்த சட்டமன்றத்தில் சுத்தமான மற்றும் கண்ணியமான சூழலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதிகாரிகள் இப்போது புதிய விதியை கண்டிப்பாக அமல்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புப் பணியாளர்கள் இணக்கத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள். அனைத்து உறுப்பினர்களும் ஊழியர்களும் தடையை கடைப்பிடித்து சட்டமன்றத்தின் அலங்காரத்தைப் பராமரிக்க வேண்டும் என்றும் சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, 2017ஆம் ஆண்டில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பான், குட்கா மற்றும் பிற புகையிலை பொருட்களை மெல்லுவதற்கு தடை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

uttarpradesh assembly bans gutkha pan masala
உத்தரப்பிரதேசம் | கும்பமேளாவில் மீண்டும் வாகன நெரிசல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com