“இனி, மதரசா வாரியம் கலைக்கப்படும்; மீறினால்..” எச்சரிக்கை விடுத்த உத்தரகாண்ட் பாஜக அரசு!
உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மாநிலத்தில் உள்ள மதரசா வாரியம் கலைக்கப்படும் என்றும், ஜூலை 2026 முதல் அனைத்து மதரசாக்களும் உத்தரகாண்ட் வாரியத்தின் பாடத்திட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களை மதரசா வாரியங்கள் நிர்வகிக்கின்றன. இது, பாடத்திட்டத்தை வகுக்கும் மற்றும் தேர்வுகள் நடத்தும் ஓர் அமைப்பாகும். இது மாநில அரசு உதவியுடன் அல்லது தன்னாட்சி அதிகாரம் பெற்று, மதக் கல்வி மற்றும் நவீனக் கல்வியை வழங்கி வருகிறது. வஸ்தானியா (தொடக்க நிலை), ஃபவுகானியா (இடைநிலை), மவ்லவி, ஆலிம், பாசில் (உயர் கல்வி) எனப் பல்வேறு நிலைகளில் கல்வியை வழங்கும் இந்த அமைப்புகள் குர்ஆன், ஹதீஸ், அரபு மொழி போன்ற மதக் கல்வியுடன், கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்ற பொதுவான பாடங்களும் கற்றுத் தரப்படுகின்றன. இதன்மூலம் ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தி, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்களை இந்த வாரியம் வழங்குகிறது. உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தனித்தனி மதரசா வாரியங்கள் செயல்படுகின்றன.
இந்த நிலையில், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மாநிலத்தில் உள்ள மதரசா வாரியம் கலைக்கப்படும் என்றும், ஜூலை 2026 முதல் அனைத்து மதரசாக்களும் உத்தரகாண்ட் வாரியத்தின் பாடத்திட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.
ஹரித்வாரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ‘அனைத்து மாணவர்களுக்கும் சீரான மற்றும் நவீன கல்வியை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம். மாநிலப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தவறும் மதரசாக்கள் மூடப்படும்’ எனறு அவர் எச்சரித்துள்ளார்.
அவருடைய இந்த அறிவிப்புக்குப் பல்வேறு இந்த மதத் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், பாஜக அரசின் இந்த அறிவிப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. முதல்வரின் இந்தக் கருத்துக்கு முஸ்லிம் அமைப்புகளிடமிருந்தோ உடனடியாக எந்தப் பதிலும் வரவில்லை என்றாலும், முன்னதாக பாஜக அரசு அந்த வாரியத்தைக் கலைக்கும் யோசனையை முன்வைத்தபோது, முஸ்லிம் மதத் தலைவர்கள் அதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினரான மௌலானா காலித் ரஷீத் ஃபிரங்கி மஹாலி, “மதரசா வாரியத்தை ஒழிப்பதற்கான உத்தரகாண்ட் அரசின் முடிவு சட்டவிரோதமானது” எனத் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவர் மௌலானா முஃப்தி ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி, ”உத்தரகாண்ட் அரசு உண்மையாகவே சிறுபான்மையினரின் நலனுக்காகப் பணியாற்ற விரும்பியிருந்தால், கொள்கைகளைச் செயல்படுத்தவும், தேர்வுகளை நடத்தவும், அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் நிர்வகிக்கவும் மதரசா வாரியத்தைப் பயன்படுத்தியிருக்கலாமே” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

