இந்தியா
டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதற்கு பாகிஸ்தானே காரணம் -உச்ச நீதிமன்றத்தில் உ.பி அரசு தகவல்
டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதற்கு பாகிஸ்தானே காரணம் -உச்ச நீதிமன்றத்தில் உ.பி அரசு தகவல்
டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதற்கு பாகிஸ்தானிலிருந்து காற்று அதிக அளவில் வீசுவதே காரணம் என உத்தரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது. காற்று மாசு தொடர்பாக வழக்கை தாக்கல் செய்த மனுதாரர் வாதிடுகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் கரும்பு ஆலைகள் வெளியிடும் மாசு முக்கிய காரணம் என்றார். அப்போது குறுக்கிட்ட உத்தரப்பிரதேச அரசு தரப்பு வழக்கறிஞர், பாகிஸ்தானில் இருந்து வரக் கூடிய காற்று தூசுகளை எடுத்து வருவதால் தான் காற்று மாசுபாடு ஏற்படுகிறது என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி அப்படி என்றால் பாகிஸ்தானில் இருக்கக்கூடிய தொழிற்சாலைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என கேட்கிறீர்களா என கிண்டல் தொனியில் வினவினார்.
இதனிடையே காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்வைத்த யோசனைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான ஐந்து பேர் கொண்ட சிறப்பு குழு மற்றும் 40-க்கும் மேற்பட்ட அதிரடி கண்காணிப்புப் பிரிவு உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய மாநில அரசுகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தன. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தவிர மற்ற கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

