உ.பி: ‘ரூ.1.2 லட்சம் சம்பளமா இருந்தாலும்...’ - திருமணத்தை திடீரென நிறுத்திய மணப்பெண்.. என்ன காரணம்?
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக பலரால் நம்பப்பட்டாலும், பெரும்பாலும் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் அனைத்துவித ‘ஜாதக’ பொருத்தங்கள், வசதிவாய்ப்புகள் உள்ளிட்டவற்றைப் பார்த்தே அதை ஏற்பாடு செய்கின்றனர். சிலர்தான் இப்படியான புறக்காரணங்களை ஒதுக்கித்தள்ளி, அன்பை மட்டுமே பிரதானமாக கொண்டு காதல் திருமணம் செய்துகொள்கின்றனர். அதிலும் அந்த திருமணத்தை ஆடம்பரமாக செய்வதா, அமைதியாக செய்வதா என்பது அடுத்த பிரச்னை.
இன்றைய இளைஞர்களும், பெண்களும் தமக்கான வரன்களைத் தாங்களே தேடிக் கொள்வதுடன், அவற்றைச் சிறப்பாய்த் தேர்ந்தெடுப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அப்போதுதான் தங்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாய் அமையும் என்ற நம்பிக்கையே இதன் காரணம். அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் வீட்டார் சம்மதத்துடன், அவர்கள் உதவியோடு தனக்கான வரனை தேடியுள்ளார். ஆனால் இறுதியில், அந்த மணமகன் அரசு வேலையில் இல்லை என்பதற்காக, தனது திருமணத்தையே வேண்டாம் எனக் கூறியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
இதையும் படிக்க:மகாராஷ்டிரா | அடுத்த முதல்வர் யார்? எதிர்பார்ப்புக்கு பதிலளித்த ஏக்நாத் ஷிண்டே!
உத்தரப்பிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரைச் சேர்ந்த பொறியாளருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தான் அரசு வேலையில் பொறியாளராக இருப்பதாகவும், மாதம் ரூ.1.2 லட்சம் சம்பளம் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார் மணமகன். இதையடுத்தே, மணப்பெண்ணும் சம்மதம் தெரிவித்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில், மணமகன் அரசு வேலையில் இல்லாதது மணப்பெண்ணுக்குத் தெரிய வந்தது. இருப்பினும் அவர் தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.1.2 சம்பளத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.
இதற்கான ரசீதையும் மணப்பெண் குடும்பத்தாரிடம் காண்பித்துள்ளார். அதை மணப்பெண் குடும்பத்தினர் ஏற்றபோதும், மணப்பெண் ஏற்கவில்லை. இதையடுத்து, திருமண மாலை மாற்றும்போது அவர் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளார். இருதரப்பினரும், மணப்பெண்ணிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் கடைசிவரை அந்த மணமகனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் திருமணம் நின்றுபோனது. அதேநேரத்தில், திருமண ஏற்பாட்டுக்கு ஆன செலவை இரு வீட்டாருக்கும் பகிர்ந்துகொண்டனர்.
‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்க’ என நாம் பேசும் இதே இந்தியாவில்தான், இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. கணவன் மனைவி எனும் வரும்போது, பொருளாதார சுமைகளை யாரேனும் ஒருவர் மட்டுமே பொறுப்புடன் சுமக்க வேண்டும் என நினைப்பது நிச்சயம் சிக்கலுக்குரியதே. அப்படி ஒருவர் சுமக்கும்போதும், அவர் பார்ப்பது அரசு வேலையா தனியார் வேலையா என யோசித்தல், இன்னும் சிக்கலே! அப்படியொரு சிக்கலே இந்த திருமணத்திலும் நடந்துள்ளது என்பதால், இது பேசுபொருளாகி உள்ளது.