அமெரிக்கா| இந்திய மாணவர்களை வஞ்சிக்கும் விசா நடைமுறைகள்.. எண்ணிக்கை 15% சரிவு!
அமெரிக்காவின் புதிய விசா கொள்கைகள் இந்தியர்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளன. எச்-1பி விசா கட்டணம் 1 லட்சம் டாலரைத் தாண்டும் வகையில் உயர்த்தப்படுவதால் இந்திய ஐடி நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. விசா காலவரம்பு 4 ஆண்டுகளாகக் குறைப்பு மற்றும் ‘ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெய்னிங்’ கட்டண உயர்வு காரணமாக சர்வதேச மாணவர் விண்ணப்பங்கள் 10% சரிந்துள்ளன; இதில் இந்திய மாணவர்கள் மட்டும் 15% வீழ்ச்சியை சந்திக்கின்றனர்.
அமெரிக்காவில் உயர் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான புதிய எச்-1பி (H-1B) விசா விண்ணப்பக் கட்டணத்தை 1 லட்சம் டாலருக்கு மேல் உயர்த்த டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் ஏற்கனவே இருந்த கட்டணத்தை விட இந்திய மதிப்பில் சுமார் 99 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
எச்-1பி விசாவைப் பெறுபவர்களில் 70%க்கும் அதிகமானோர் இந்தியர்கள் என்பதால், இந்தத் திடீர் அறிவிப்பு இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் ஐடி நிறுவனங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தசூழலில் தான் அமெரிக்காவின் கடுமையான விசா நடைமுறைகள் காரணமாக, அங்கு உயர்கல்வி படிக்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளது. 'காமன் ஆப்' (Common App) அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச மாணவர்களின் விண்ணப்பங்கள் ஒட்டுமொத்தமாக 10 சதவீதம் சரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசா காலவரம்பு 4 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது மற்றும் படிப்புக்குப் பிறகு வழங்கும் வேலைவாய்ப்புக்கான 'ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெய்னிங்' கட்டணத்தை உயர்த்தும் திட்டமே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

