மீண்டும் மீண்டும்.... இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தை நிறுத்தியது நான்தான்- டிரம்ப் பேச்சு!
சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் குறித்த கருத்தை மீண்டும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “அனைவரையும் ஒற்றுமையாக இருக்க வைத்து, அமைதியை நிலைநாட்டுபவராக இருப்பதுதான் எனது எண்ணம். எனது நிர்வாகத்தினர் எடுத்த முயற்சியால், போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. வர்த்தகத்தைப் பயன்படுத்தி இதை சாத்தியமாக்கி இருக்கிறோம்.” என்று மீண்டும் பேசியிருக்கிறார்.
ஏற்கெனவே இந்த கருத்தினை அவர் முன்வைத்திருந்தநிலையில், எதிர்கட்சிகள் கேள்விகளை எழுப்பினர். இந்தநிலையில், மீண்டும் டிரம்ப் இவ்வாறு பேசியிருப்பது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், இதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
திட்டவட்டமாக மறுத்துள்ளது.
டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், செய்தியாளர்களை
சந்தித்தார். அப்போது அவர், ” ஆபரேஷன்
சிந்தூர் தொடங்கியது முதல் சண்டை
நிறுத்தம் ஏற்பட்டது வரை, இந்திய
மற்றும் அமெரிக்க தலைவர்கள் ராணுவ
நடவடிக்கைகள் குறித்தே பேசப்பட்டது. வர்த்தகம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தான் மட்டுமே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டுமென்பது, நாட்டின் நீண்டகால நிலைப்பாடு. அதில் மாற்றமில்லை. இருநாடுகளுக்குமிடையே தற்போது இருக்கும் பிரச்சினை, ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் வெளியேறுவதுதான். அதேபோல், அணு ஆயுத மிரட்டலை விடுக்கமாட்டோம் என்பது இந்தியாவின் நிலைப்பாடு . எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை கைவிடும் வரை, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.