உ.பி. | 33 குழந்தைகளுக்கு கொடூரம் இழைத்த தம்பதி.. மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!
உத்தரப்பிரதேசத்தில் 33 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தம்பதியினருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் சிலர் மூன்று வயதுக்கும் குறைவானவர்கள். உத்தரப் பிரதேசத்தின் சிறப்பு போக்சோ நீதிமன்றம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கு அரிதிலும் அரிதானது என்றும் மற்றும் கொடூரமான இயல்புடைய குற்றம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட ராம்பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதி ஆகியோர் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் பல பிரிவுகளின்கீழ் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டனர். அவற்றில் இயற்கைக்கு மாறான குற்றங்கள், பாலியல் குற்றங்கள், குழந்தை ஆபாசப் படங்கள் மற்றும் குற்றவியல் சதி ஆகியவை அடங்கும். உயிர் பிழைத்த ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. இதுதவிர, குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட எந்தவொரு பணத்தையும் உயிர் பிழைத்தவர்களுக்கு சமமாகப் பிரித்து வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயேகக் குற்றச்சாட்டுகளின் பேரில், ராம்பவன் மற்றும் அவரது மனைவி மீது சிபிஐ அக்டோபர் 2020ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாலியல் குற்றங்களைச் செய்ததாக சிபிஐ கண்டறிந்தது. குற்றங்கள் காட்டுமிராண்டித்தனமானவை; உயிர் பிழைத்தவர்களின் உடல்களில் காயங்கள் இருந்தன. அவர்களில் சிலர், பல ஆண்டுகளாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது.
சிலருக்கு கண்களில் காயம் ஏற்பட்டிருந்தது. மேலும் பலர் வேட்டையாடுபவர்களால் ஏற்பட்ட உளவியல் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட தம்பதிகள் 2010 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடையில் உ.பி.யின் பண்டா மற்றும் சித்ரகூடில் இருந்துள்ளனர். ராம்பவன் நீர்ப்பாசனத் துறையில் ஜூனியர் இன்ஜினியராகப் பணிபுரிந்து வந்தார். குழந்தைகளை கவர்ந்திழுக்க அவர் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தியுள்ளார். ஆன்லைன் வீடியோ கேம்களை காண்பித்தும், பணம் மற்றும் பரிசுகளை வழங்கியும் குழந்தைகளைக் கூட்டி வந்துள்ளார். சிபிஐ விசாரணையின் போது பாதிக்கப்பட்டவர்கள் சிறு வயதினராக இருந்ததால் அவர்களை கவனமாகவே கையாண்டனர். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, ஆலோசனை மூலம் அவர்களின் நல்வாழ்வு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிபிஐ பிப்ரவரி 2021, ராம்பவன் மற்றும் அவர் மனைவி மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

