‘தேர்தல் முடிஞ்சதும் பெட்ரோல், டீசல் விலை உயரும்..’ பரவும் வதந்தி.. மத்திய அரசு சொல்வது என்ன?
ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்த இருப்பதாக மக்களிடம் ஒரு தவறான வதந்தி பரவி வருகிறது. இதனால், பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதுதொடர்பாக, மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நிறுத்துவதற்கான முயற்சியில் பாகிஸ்தான் இருதரப்பையும் மத்தியஸ்தம் செய்துவருகிறது. எனினும், இதுவரை அதில் எந்தச் சுமுக உடன்பாடும் ஏற்படவில்லை. இதற்கிடையே, உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் கப்பல்களைக் குறிவைத்தும், கைப்பற்றியும் அச்சுறுத்தி வருகின்றன. இதனால் உலகளாவிய அளவில் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கச்சா எண்ணெய்யின் விலையேற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்திற்கும் மேல் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு பேரல் சுமார் 70 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெய், இந்த மாதம் சராசரியாக 114 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உள்ளது. இதனால், இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மூன்று மடங்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், உலகளவில் விலை உயர்வு இருந்தபோதிலும், இந்தியாவில் சில்லறை எரிபொருள் விலை 2022 ஏப்ரல் மாதத் தொடக்கத்திலிருந்து மாற்றமின்றி உள்ளது. அதாவது, கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த காலங்களில் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை லாபத்துடன் சமன் செய்துவந்த நிலையில், தற்போது எண்ணெய் தட்டுப்பாடுகளுக்கு இடையேயும் மாற்றமின்றி அதை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், சமீபத்தில் ப்ரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. அதன்படி, நயாரா நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5-ம், டீசலுக்கு ரூ. 3-ம் உயர்த்துவதாக அறிவித்திருந்தது. ஆனால், அடுத்த சில நாட்களில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை ஏற்றத்தை தடுக்கும் நோக்கில் எண்ணெய் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வசூலிக்கப்பட்ட ரூ. 13 கலால் வரியை ரூ. 3 ஆகக் குறைக்கப்பட்டது. டீசலுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்ட நிலையில், முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஐந்து மாநிலங்களுக்கான (தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம்) சட்டப்பேரவைத் தேர்தல் நாளையுடன் நிறைவடைகிறது. அதாவது, ஏற்கெனவே 4 மாநிலங்களில் தேர்தல் முழுவதுமாக நிறைவடைந்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் நாளை இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்துடன், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களுக்கும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இத்தகைய சூழலில், ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்த இருப்பதாக மக்களிடம் ஒரு தவறான வதந்தி பரவி வருகிறது. இதனால், பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தில், விலை உயர்வு குறித்த வதந்திகளால் பெட்ரோல் நிலையங்களில் மக்கள் பீதியுடன் பொருட்களை வாங்குவதாகவும், அதனால் பெட்ரோல் நிலையங்களில் நீண்டவரிசைகள் காணப்படுவதாகவும் செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அங்கு, 400-க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து போனதாகவும், சில நிலையங்களில் தேவை 30 முதல் 33 சதவீதம் வரை அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வதந்தி காரணமாக அங்கு கூட்டம் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய விலை உயர்வு குறித்த யூகங்களுக்கு மத்தியில், மேற்கு வங்கத்தில் நாளை வாக்குப்பதிவு முடிந்த பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, "அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், கையிருப்பு இருப்பதை உறுதி செய்வதற்கும், பொருட்கள் தீர்ந்துபோகாமல் இருப்பதற்கும், விநியோகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்துவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை. தயவுசெய்து வதந்திகளை நம்ப வேண்டாம். பீதியுடன் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கவும். அதிகாரப்பூர்வமான தகவல்களையே நம்புங்கள். விலை நிலையாக உள்ளது. மேலும் விலைகளில் எந்த உயர்வும் இல்லை” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

