திருப்பதிக்கு போகத் தயாரா..? ரூ.2 லட்சம் To ரூ.10 லட்சம்.. தேவஸ்தானம் மெகா சர்ப்ரைஸ்!
நாட்டிலேயே முதல்முறையாக, திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD), திருப்பதிக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அறிவித்துள்ளது. அதன்படி, இயற்கை மரணம் அடைந்தால் ரூ. 2 லட்சமும் விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். அப்படி வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தான நிர்வாகம் தங்கும் இடம், உணவு என பல வசதிகளை செய்து வருகிறது. இந்த நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் காப்பீடு சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருமலையில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எதிர்பாராதவிதமாக இயற்கை எய்தினால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், திருமலை அல்லது அலிபிரி மலைப்பாதைகளில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழக்கும் பக்தர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
எல்.ஐ.சியுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், இக்காப்பீட்டுத் திட்டத்திற்கு பக்தர்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை எனவும், இதற்கான பிரீமியம் தொகையை தேவஸ்தான நிர்வாகமே முழுமையாக ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பணியின்போது விபத்தில் உயிரிழக்கும் TTD ஊழியர்களுக்கான காப்பீட்டுத் தொகையும் ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நிதிப் பாதுகாப்பை உறுதிசெய்ய திருப்பதி திருமலை தேவஸ்தானம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

