TMC யாருக்குச் சொந்தம்? மோதலில் மம்தா - அதிருப்தி குழு.. இறுதி முடிவெடுக்கும் ECI?
மம்தா பானர்ஜிதான் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் எனக் கூறி கட்சி நிர்வாகிகள் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இருதரப்பும் போட்டி போடுவதால், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையமே இறுதி முடிவு எடுக்கவுள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாக உடைந்துள்ள நிலையில், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாபிரதா 61 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். இந்த நிலையில்தான், கொல்கத்தாவில் ரிதாபிரதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், பல்வேறு மாநகராட்சிகளில் பதவி வகிக்கும் 70 கவுன்சிலர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜியை நீக்குவதாக அறிவித்த அக்கட்சியின் அதிருப்தி கோஷ்டி தலைவர் ரிதாபிரதா பானர்ஜி, அவருக்குப் பதிலாக, ஹவுரா மத்திய தொகுதி எம்எல்ஏவான அரூப் ராய் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அரூப் ராய்தான் தி்ரிணாமுல் காங்கிரஸ் தலைவர் என தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்த உள்ளதாகவும், கட்சியின் பெயரையும் சின்னத்தையும் தங்களுக்கு ஒதுக்குமாறு கோர உள்ளதாகவும் ரிதாபிரதா பானர்ஜி அறிவித்தார்.
இந்த நிலையில் மம்தா பானர்ஜிதான் தலைவர் எனக்கூறி பிற நிர்வாகிகள் பட்டியலும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மற்றும் குணால் கோஷ் ஆகியோர் இந்தச் சம்பவத்தை "முற்றிலும் நகைச்சுவையானது" என்று விமர்சித்துள்ளனர்.
"மம்தா பானர்ஜி இல்லாமல் திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியே இல்லை; கட்சியின் சின்னமும், அங்கீகாரமும் மம்தா பானர்ஜிக்கு மட்டுமே சொந்தம்" என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். அதேநேரத்தில், இரு தரப்பும் தனித்தனியாகத் தேர்தல் ஆணையத்திடம் பட்டியலை அளித்துள்ளதால், கட்சியின் பெயர் மற்றும் சின்னம் யாருக்குச் சொந்தம் என்பதைத் தேர்தல் ஆணையமே சட்டப்பூர்வமாக ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கவுள்ளது.

