’தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்..’ - ராகுல் காந்தி
செய்தியாளர் - M. மீரா
தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. ஜூலை 23-ம் தேதி தொடங்கிய இந்த முகாமின் நிறைவு நாளான ஆகஸ்ட் 1-ம் தேதி, ராகுல் காந்தி அதில் கலந்து கொண்டார்.
அப்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உட்கட்சிப் பூசலே முட்டுக்கட்டையாக உள்ளது என்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பேசிய அவர், நிர்வாகிகளை அரவணைத்துச் செல்லாத மாவட்டத் தலைவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்றும், நிர்வாகிகளின் செயல்பாடுகளை கட்சி மேலிடம் கண்காணிக்கிறது என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களை ஏற்று பணியாற்ற முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தொகுதி மறுவரையறை குறித்து கடுமையான கருத்தை கூறியுள்ளார்.
தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டை கடுமையாகப் பாதிக்கும் என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, இதை ஒவ்வொரு மாநில மற்றும் தேசிய கட்சியும் எதிர்த்து தோற்கடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்த நடவடிக்கை தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அரசியல் அதிகாரத்தைப் பறித்துவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும்,தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் எட்டப்பர்கள் என்றார். அவர் பொதுவாக, தமிழ்நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொகுதி மறுவரையறையை ஆதரிக்கும் அரசியல் சக்திகளை தமிழ்நாட்டின் எட்டப்பர்கள் என்று அரசியல் ரீதியாக விமர்சித்துள்ளார்.

