தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்வு.. 2 ஆண்டுகளில் 152% அதிகரிப்பு!
சென்னையில்ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 2,400 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்த நிலையில், இன்று 2400 ரூபாய் உயர்ந்து ரூ.15200-க்கு விற்பனையாகிறது. அதன்படி, தங்கம் விலை ஒரு சவரன் 1 லட்சத்து 21600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்க கடன் 128% அதிகரிப்பு
தங்க கடன்கள் ஆண்டுக்கு 128% அதிகரிப்பதாக, ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதேபோல், நிலுவையிலுள்ள மொத்த தங்க கடன்கள், 4 லட்சம் கோடி ரூபாயை முதல்முறையாக தாண்டியுள்ளது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நிலவரப்படி, நிலுவையிலுள்ள தங்க கடன்கள் 4லட்சத்து 517 கோடியாக உள்ளது. தங்க கடன்கள் பெறுவது அதிகரிப்பதற்கு, அதன் விலை 2 ஆண்டுகளில் 152 சதவீதம் உயர்ந்திருப்பது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
அச்சத்தால் உயரும் தங்கம் விலை
தங்கம் விலை ஏற்றத்துக்கு பின், உலக நாடுகளின் கடன் சுமை ஒளிந்துள்ளதாக, உலக தங்க கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி டேவிட் டைட் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொதுக்கடன் அதிகரித்து வருவது, உலக பொருளாதாரத்தில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது உலக நாடுகளின் மத்திய வங்கிகள் ஆர்வம் காட்டுவதாகவும், அதுவே தங்க விலை ஏற்றத்துக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், ஆயிரம் டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

