காங்கிரஸ் எம்.பி. சுதாவின் செயின் மீட்பு... கைதான திருடர்!
டெல்லியில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி. சுதா அதில் பங்கேற்று வருகிறார். காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினரான சுதா தமிழ்நாடு இல்லத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி டெல்லி சாணக்கியாபுரி சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அவருடன் மற்றொரு தமிழக எம்.பி-யான ராஜாத்தியும் நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது, போலாந்து நாட்டின் தூதரகத்திற்கு அருகே பைக்கில் வந்த ஒருவர் எம்.பி சுதாவிடம் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.
ஹெல்மெட் அணிந்து கொண்டு எதிர் திசையில் மெதுவாக வந்து பின்னர் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதில், எம்.பி கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டதுடன், அவர் அணிந்த உடையும் கிழிந்துள்ளது.
இதுகுறித்து எம்.பி சுதா சாணக்கியா பூரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள போதிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார். உயர் பாதுகாப்பு கொண்ட பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட போது தன்னுடைய 4 பவுனுக்கு அதிகமான தங்க சங்கிலி பறித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், குற்றவாளியை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார்.
இந்நிலையில், மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் நகையை பறித்துச் சென்ற குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திருடி சென்ற 4.5 சவரன் தங்க நகையையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.