இல்லத்தரசிகளின் வீட்டுப் பணி | மாதம் ரூ.30,000 மதிப்பு.. புதிய அளவுகோல் வகுத்த உச்சநீதிமன்றம்!
சாலை விபத்துகளில் உயிரிழக்கும் இல்லத்தரசிகளுக்கான இழப்பீட்டைக் கணக்கிடும்போது, அவர்களது ஊதியமில்லா வீட்டுப் பணியின் மதிப்பை மாதம் 30,000 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இல்லத்தரசிகளின் பணிகளுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றாலும் அவர்களே 'தேசத்தை கட்டமைப்பவர்கள்' என்று நீதிபதிகள் சஞ்சய் கரோல், கோடீஸ்வர சிங் அமர்வு புகழாரம் சூட்டியுள்ளது.
இந்தப் புதிய தீர்ப்பின் மூலம் நாடு முழுவதும் உயிரிழந்தோருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2001-இல் பஞ்சாப் மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த ரேஷ்மா என்ற பெண்ணுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு 2024 வரை நீடித்ததற்குத் தீவிர கவலை தெரிவித்த நீதிமன்றம், இதுபோன்ற விபத்து இழப்பீடு வழக்குகளைப் பொதுவாக ஓராண்டிற்குள் முடித்து வைக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

