மணிப்பூர் கலவரம் | கசிந்த முதல்வரின் ஆடியோ.. ஆய்வுசெய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர்.
இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னும் பலர், அண்டை மாநிலங்களில் குடியேறினர். இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது.
மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த வன்முறை, இன்றளவும் முடிவுக்கு வரவில்லை.
இதற்கிடையே, மணிப்பூரில் நடந்த கலவரங்களுக்கு மாநில முதல்வரே காரணம் எனக் கூறி, சில ஆடியோக்கள் வெளியாகின. குக்கி இன மாணவர் அமைப்பு, இந்த ஆடியோ ஆதாரங்களை இரண்டு கட்டங்களாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. மணிப்பூர் அரசு இதற்கு மறுப்பு தெரிவித்தது. ”ஆடியோவில் இருப்பது தன் குரல் அல்ல” என மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் வன்முறையை துாண்டியதாக கூறி, குக்கி இன ஒருங்கிணைப்பு குழு ஆடியோ ஆதாரங்களுடன் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த பூஷன், “ட்ரூத் லேப்ஸ் என்ற தனியார் தடயவியல் நிறுவனம் நடத்திய சோதனையில், ஆடியோவில் உள்ள குரல் பிரேன் சிங் குரலுடன் 93 சதவீதம் பொருந்துகிறது” என்றார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஆடியோ டேப்களை மத்திய அரசின் ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனைக்கு உட்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்ட முதல்வர் பிரேன் சிங் உரையாடல் அடங்கிய ஆடியோ டேப்புகளை ஆய்வுசெய்து அதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, மத்திய தடயவியல் ஆய்வகததிற்கு உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.