’விவாகரத்து பெற்றவராக சாக விரும்பவில்லை’ - 82 வயது மனைவிக்கு எதிரான 89 வயது முதியவரின் மனு தள்ளுபடி!
விமானப் படையில் வேலை பார்த்த அவருக்கு, தற்போது வயது 89. சண்டிகரைச் சேர்ந்த அந்த அவர், 1963ஆம் ஆண்டு அமிர்தசரஸில் சீக்கிய சடங்குகளின்படி திருமணம் செய்துகொண்டார். இவரது மனைவி ஒரு முன்னாள் ஆசிரியை ஆவார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில், அந்த முதியவர், கடந்த 1984ஆம் ஆண்டு சென்னையில் பணியாற்றியபோது, கணவர் மற்றும் மனைவி ஆகியோரது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
விவாகரத்து கேட்டு உச்ச நீதிமன்றத்தில் முதியவர் மனு!
இதைத் தொடர்ந்து அவர், விவாகரத்து தொடர்பாக குடும்ப நல நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இதையடுத்து, சண்டிகர் மாவட்ட நீதிமன்றம் கடந்த 1996இல் அவருக்கு விவாகரத்து வழங்கியிருக்கிறது. இது மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த உத்தரவை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றங்கள் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து அந்த முதியவர், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
முதியவர் மனுவில் குறிப்பிட்டது என்ன?
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ’தாம் சென்னையில் பணியாற்றிய காலத்தில், தனது மனைவி, தன்னுடன் சென்னையில் வந்து வாழவில்லை. மேலும் தனக்கு இதயத்தில் உடல்நலப் பிரச்னை இருந்தும் அவர் தம்மைக் கவனித்துக் கொள்ளவில்லை. அத்துடன், தன்னிடம் மிகக் கடுமையாகவும் நடந்துகொண்டார்.
விமானப்படை அதிகாரிகளிடமும் அவர், தனக்கு எதிராக நடந்துகொண்டார். அதனால் அவரைவிட்டு வெளியேறிவிட்டேன். மேலும், 1996 முதல் தனது மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், தங்களது திருமணம் ஏற்கெனவே மீட்கமுடியாமல் முறிந்துவிட்டது’ என்று அதில் தெரிவித்துள்ளார்.
கணவரை விட்டுக்கொடுக்காத மனைவி
இதற்கு அவரது மனைவியின் தரப்பிலும் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ’எனக்கு 82 வயதாகிறது. இதற்குமேல் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்வேன் எனத் தெரியாது. இப்போதும் தனது கணவரை கவனித்துக்கொள்ள தயாராக இருக்கிறேன். அவரை விட்டுச்செல்லும் திட்டமில்லை. விவாகரத்து பெற்றவராகச் சாவதற்கு தனக்கு விரும்பவில்லை’ எனக் கூறப்பட்டு உள்ளது.
மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அணிருத்தா போஸ், பெலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, ’மனித வாழ்வில் திருமணம் என்ற பந்தம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. சமூகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது’ எனக் குறிப்பிட்டு, 89 வயதான முதியவருக்கு விவாகரத்து வழங்க மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
இதையும் படிக்க: ’குழந்தையைக் கொல்ல முடியாது’ - 26 வார கரு விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து!