நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே இருச்சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த புகைப்படம் சமீபத்தில் வைரலானது. இது குறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டரில், நீதிபதி ஹெல்மெட் அணியாதிருந்தது குறித்தும் முகக்கவசம் அணியாதிருந்தது குறித்தும் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதையடுத்து உச்சநீதிமன்றம் பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கினை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த வழக்கினை விசாரித்து வரும் நிலையில் தற்போது இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தது. பிரசாந்த் பூஷனுக்கு எந்த மாதிரியான தண்டனைகள் என்பது குறித்த தீர்ப்பு இன்று வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எந்த மாதிரியான தண்டனை வழங்கலாம் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது பிரசாந்த் பூஷன் “6 வருடங்களில் உச்சநீதிமன்றம் என்ன செய்து வருகிறது என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதில் முக்கியமாக பார்க்கப்படுவது எழுத்து சுதந்திரம்தான். ஆனால் அதுவே மறுக்கப்படுகிறது. இது ஜனாநாயகத்திற்கு விரோதமானது. இந்த வழக்கில் தண்டனைக்கு தயார். நீதிபதிகள் குறித்த கருத்தில் தற்போதும் தெளிவாக இருக்கிறேன். மன்னிப்பு கேட்க மாட்டேன். சீராய்வு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் இருக்கும்போது எதற்கு இவ்வளவு அவசரமாக தண்டனை வழங்க முற்படுகிறீர்கள்” என கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால் தண்டனை வழங்குகிறோம். அதற்கும் சேர்த்து உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லுங்கள் என நீதிபதிகள் தங்கள் முடிவில் திட்டவட்டமாக இருக்கின்றனர்.