நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை - சித்தராமையா சொல்வதென்ன?
ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வென்றதை அடுத்து கடந்த ஜூன் 4ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க போதிய ஏற்பாடுளை போலீசார் செய்யவில்லை எனத் தெரிவித்த மாநில அரசு பெங்களூரு போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். சிலர் இடமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர். எதிர்க்கட்சியினர், மாநில அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று காவல் துறையினர் எச்சரித்ததாகவும், அரசு அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டு வந்தது.
கர்நாடக சட்டமன்ற கட்டிடத்தின் பாதுகாப்பு பொறுப்பாளர் எம்.என்.கரிபசவன கவுடா, இதுதொடர்பாக அரசு பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் துறையின் செயலர் ஜி.சத்யவதிக்கு கடிதம் எழுதியதாகவும், அந்தக் கடிதத்தின் பிரதி தங்களிடம் இருப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட இடத்தில் போதுமான எண்ணிக்கையில் காவலர்களும் சிசிடிவி கேமராக்களும் இல்லாதது உள்ளிட்ட சிக்கல்களை சுட்டிக்காட்டி நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று கவுடா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்தநிலையில், இந்த விழாவை ஏற்பாடு செய்த கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் அழைப்பின் பேரில்தான், தாம் அங்கு சென்றதாகவும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ” கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் என்னைச் சந்தித்தனர். அப்போது பாராட்டு விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். இந்த நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை. கர்நாடக கிரிக்கெட் சங்கமே நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் கவர்னர் கலந்து கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால், அங்கு சென்றேன். என்னை அழைத்ததற்கு பிறகு நடந்தது தெரியாது. மைதானத்திற்கு அவர்கள் என்னை அழைக்கவில்லை. ” என்று தெரிவித்துள்ளார்.