ம.பி. | சர்ச்சையை சந்தித்த '90 டிகிரி' போபால் ரயில் பாலம்.. 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!
மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள ஐஷ்பாக் மைதானத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் ஒன்று, கடந்த வாரம் இணையத்தில் வைரலானது. அதாவது, ரூ.18 கோடியில் கட்டப்பட்ட, 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த மேம்பாலம் திரும்புவதற்கு 45 டிகிரி வளைவாக இல்லாமல் 90 டிகிரி வளைவில் திரும்பும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இணையத்தில் பலரும் இந்த மேம்பால புகைப்படங்களை பகிர்ந்து கருத்துகளைப் பதிவிட்டனர்.
இதற்குப் பதிலளித்த நிறுவனம், “நிலப்பற்றாக்குறை காரணமாகவே பாலம் இவ்வாறு கட்டப்பட்டது” எனத் தெரிவித்தது.
இதுதொடர்பாக பொதுப்பணித் துறை (பாலத் துறை) தலைமைப் பொறியாளர் வி.டி. வர்மா, “பாலம் கட்டுவதற்கான ஒரே வழி இதுதான். மெட்ரோ நிலையம் காரணமாக, அந்தப் பகுதியில் நிலம் குறைவாகவே உள்ளது. நிலம் இல்லாததால், வேறு வழியில்லை. இது முழுப் பாதுகாப்பு நிறைந்ததுதான்” எனத் தெரிவித்திருந்தார்.
எனினும் இதுகுறித்து தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், 90 டிகிரி ரயில்வே மேம்பாலம், மாற்றியமைக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. ரயில்வே துறை தேவையான நிலத்தை ஒப்படைத்தவுடன், பாலத்தில் மாற்றங்கள் செய்யப்படும். அதன் பிறகு கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று பொதுப்பணித் துறை (PWD) தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 90 டிகிரி திருப்பம் கொண்ட போபால் பாலத்தைக் கட்டியது தொடர்பாக ஏழு பொறியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அப்பாலத்தின் தவறான வடிவமைப்பிற்காக மத்தியப் பிரதேச அரசு பொதுப்பணித் துறையின் இரண்டு தலைமைப் பொறியாளர்கள் உட்பட ஏழு பொறியாளர்களை இடைநீக்கம் செய்துள்ளது. அதே நேரத்தில் ஓய்வுபெற்ற மேற்பார்வை பொறியாளர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், “ஐஷ்பாக் ஆர்ஓபி கட்டுமானத்தில் கடுமையான அலட்சியத்தை நான் அறிந்து விசாரணைக்கு உத்தரவிட்டேன். விசாரணை அறிக்கையின் அடிப்படையில், எட்டு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனம் மற்றும் வடிவமைப்பு ஆலோசகர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஆர்ஓபியில் தேவையான மேம்பாடுகளைச் செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.