ஆட்டத்தை ஆரம்பித்த ஆம் ஆத்மி.. பாஜகவுக்கு தாவிய சந்தீப் பதக்.. சுற்றி வளைக்கும் பஞ்சாப் அரசு!
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சில நாட்களுக்குப் பிறகு, சந்தீப் பதக் பஞ்சாபில் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், காவல்துறை இதுகுறித்து எந்த விரிவான அறிக்கை வெளியிடவில்லை.
ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவராக இருந்த ராகவ் சதாவுக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலும் இடையே மோதல் வெடித்த நிலையில், அக்கட்சியிலிருந்து விலகி, ராகவ் சதா பாஜகவில் ஐக்கியமானார். அவருடன் சேர்த்து ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பிக்களான 7 பேரும் பாஜகவில் ஒரேநேரத்தில் இணைந்தது, அக்கட்சிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. இதில், சந்தீப் பதக்கும் ஒருவர். இந்த நிலையில், சில வழக்குகளால் சந்தீப் பதக் பஞ்சாபில் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் காவல்துறை இரண்டு வெவ்வேறு மாவட்டங்களில் இந்த வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், ஊழல் மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் தொடர்பான ஜாமீனில் வெளிவர முடியாத குற்றச்சாட்டுகளும் இந்த முதல் தகவல் அறிக்கைகளில் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்குகளின் அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், கைது மற்றும் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகள் சேர்க்கப்பட்டிருப்பது பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், காவல்துறை இதுகுறித்து எந்த விரிவான அறிக்கை வெளியிடவில்லை.
இதுகுறித்து சந்தீப் பதக், “முதல் தகவல் அறிக்கைபதிவு செய்யப்பட்டிருப்பது தனக்குத் தெரியாது; எந்தக் காவல் துறை அதிகாரியும் தனக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் அவர் வகிக்கும் பாஜகவும், “இது பழிவாங்கும் அரசியல்” எனத் தெரிவித்துள்ளது.
பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு உள்ளது. இந்த அரசு அமையவுள்ள முக்கியப் பங்காற்றியவர்களில் சந்தீப் பதக்கும் ஒருவர். அவர், தற்போது பாஜகவில் இணைந்திருப்பதும், தவிர, அடுத்த ஆண்டு பஞ்சாபில் நடைபெற இருப்பதும் ஆம் ஆத்மிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் அவர் கைது செயயப்படலாம் எனக் கூறப்படுகிறது.

