“காந்தியின் பொருட்கள் இந்தியாவின் சொத்து: ஏலம் விட வேண்டாம்” - வேதனையுடன் கோரிக்கை!
மகாத்மா காந்தியின் கடிதங்கள், கையெழுத்துக்குறிப்புகள், ராட்டை, பகவத்கீதை குறித்த அவரது கடிதம் உள்ளிட்ட பொருட்கள் 16 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையானது வேதனை அளிப்பதாக தேசிய காந்தி அருங்காட்சியக இயக்குநர் அ. அண்ணாமலை கூறுகிறார். காந்தியின் பொருட்கள் தனிப்பட்ட சொத்துகள் அல்ல, இந்தியாவின் வரலாற்றுச் சொத்துகள் என்பதால் அவற்றை அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்குமாறு அவர் வலியுறுத்துகிறார்.
காந்தியடிகளின் கடிதங்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏலத்தில் 16 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனதாக வெளியான செய்தி வேதனை அளிப்பதாக தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநர் அ. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
காந்தியின் கடிதங்கள் மற்றும் பொருட்கள் யாரிடம் இருந்தாலும் அவை தனிப்பட்ட உடைமைகள் அல்ல என்றும் அவை இந்தியாவின் பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சொத்துகள் என்றும் அ. அண்ணாமலை கூறியுள்ளார். அவற்றை வைத்திருப்பவர்கள் டெல்லியிலுள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். காந்தியடிகள் எழுதிய கையெழுத்துக்குறிப்புகள், அவர் பயன்படுத்திய ராட்டை, பகவத்கீதை பற்றிய அவரது கடிதம் ஆகியவை பெரும் தொகைக்கு அண்மையில் ஏலம் விடப்பட்டிருந்தன.

