மகாத்மா காந்தியின் கையெழுத்து பிரதி ஏலம்.. படைத்தது உலக சாதனை!! எத்தனை கோடி தெரியுமா?
மகாத்மா காந்தி தனது நெருங்கிய தோழரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஆனந்த் டி. ஹிகோரணிக்கு எழுதிய 688 அரிய கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு, சாஃப்ரனாட் ஏல நிறுவனத்தின் மூலம் ரூ.16.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்று ஆவணம் ஒன்று இதுவரை ஏலம் போனதில் இதுவே உலக சாதனையாகும்.
உண்மை, அகிம்சை, சேவை, பிரம்மச்சரியம் மற்றும் ஒழுக்கம் போன்ற பல்வேறு தலைப்புகளில் காந்தியடிகள் எழுதிய தினசரி குறிப்புகள் இதில் அடங்கும். ஹிகோரணியின் மனைவி வித்யாவின் மறைவுக்குப் பிறகு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு காந்தியடிகள் வழங்கிய தினசரி வழிகாட்டுதல் செய்திகளே பின்னர் "A Thought for the Day" என்ற புத்தகமாகத் தொகுக்கப்பட்டன.
"காந்தி: ஆனந்த் டி. ஹிகோரணி சேகரிப்பு" என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஏலத்தில், காந்தியுடன் தொடர்புடைய கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள், புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட 86 லாட்டுகள் இடம்பெற்றன. மகாத்மா காந்தியின் பொதுவாழ்வையும், தனிப்பட்ட மனிதரின் ஆழமான பரிமாணங்களையும் வெளிப்படுத்தும் மிக முக்கியமான ஆவணமாக இது திகழ்கிறது என்று ஏல நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

