அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்!
அமெரிக்காவின் பிரவுன்ஸ்வில்லே துறைமுகத்தில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்கிறது. இந்த திட்டம் அமெரிக்காவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரவுன்ஸ்வில்லே (Brownsville) துறைமுகத்தில், சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மாண்டமாக புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைய உள்ளது.
அமெரிக்கா ஃபர்ஸ்ட் ரிஃபைனிங் (America First Refining) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மெகா திட்டத்திற்கு, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்கிறது. 27 லட்சம் கோடி ரூபாய் (300 பில்லியன் டாலர்) மதிப்பிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம், அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய முதலீடு என்றும், இதன்மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின்படி, 125 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 1.2 பில்லியன் பேரல் அமெரிக்க ஷேல் (Shale) எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டு சுத்திகரிக்கப்பட உள்ளது. நாள் ஒன்றுக்கு 1.6 லட்சம் பேரல்கள் என ஆண்டுக்கு ஆறு கோடி பேரல்கள் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் திறன்கொண்ட சுத்திகரிப்பு ஆலை, பிரவுன்ஸ்வில்லேவில் அமைக்கப்பட உள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஈரான் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அமெரிக்காவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும் இந்த ஆலை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
