பொங்கல் பண்டிகை நாட்களில் UGC - NET தேர்வு.. மத்திய அமைச்சருக்கு அமைச்சர் கோவி.செழியன் கடிதம்
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தேர்வு முகமை UGC – NET தேர்வு ஜனவரி 3 முதல் 16 ஆம்தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 13 ஆம்தேதி முதல் ஜனவரி 16 ஆம்தேதி வரை பொங்கல் விழா தமிழ் மக்களால் கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், இந்த விழாவை முன்னிட்டு தமிழக அரசு ஏற்கனவே ஜனவரி 14 முதல் 16 வரை விடுமுறை அறிவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு விவசாயிகளின் உணர்வார்ந்த திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல், பண்டிகை மட்டுமல்ல, 3,000 ஆண்டுகளுக்கும் மேலான தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பொங்கல் திருநாளைப் போலவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் மகர சங்கராந்தி விழா ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாகக் கூறியுள்ள கோவி. செழியன், விடுமுறை நாட்களில் நெட் தேர்வு நடத்தப்பட்டால், மாணாக்கர்கள் இத்தேர்வுக்கு தயாராவதற்கும் எழுதுவதற்கும் தடை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விடுத்த வேண்டுகோளின்படி, பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜனவரி 2025க்கான பட்டயக் கணக்காளர்கள் அறக்கட்டளைத் தேர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்திடும் வகையில் பொங்கல் விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி - நெட் தேர்வு மற்றும் பிற தேர்வுகளை வேறு தேதிகளில் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய கல்வியமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.