லாரி உதவியாளர் கடத்தல்.. மீண்டும் சிக்கலில் சிக்கிய புனே Ex ஐஏஎஸ் பயிற்சியாளர்!
சாலை விபத்து ஒன்றில், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் லாரி உதவியாளர் ஒருவர், முன்னாள் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கரின் புனே வீட்டிலிருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பூஜா கேட்கர், காரில் சைரன் பொருத்தியது, கூடுதல் ஆட்சியரின் அறையைப் பயன்படுத்தியது என தனது அதிகாரத்துக்கு மீறிய சில நடைமுறைகளைச் செய்துகொண்டதாகவும், போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ்களைச் சமர்ப்பித்தது, சாதி இடஒதுக்கீட்டிலும் வருமானத்தை குறைத்துக் காட்டி அதற்கான சலுகைகளைப் பெற்றதாகவும் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய விசாரணையில் பூஜா கேட்கர் தனது பெயர், தந்தை பெயர், தாய் பெயர், புகைப்படம், கையெழுத்து, இமெயில் ஐடி, செல்போன் எண், முகவரி ஆகியவற்றை மாற்றி அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. இதையடுத்து, பூஜாவின் ஐஏஎஸ் தேர்வை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு யுபிஎஸ்சி போர்டு பூஜாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கும் அவரிடமிருந்து பதில் இல்லை.
இந்த நிலையில்தான் அவரின் தேர்ச்சியை, யுபிஎஸ்சி ரத்து செய்தது. வருங்காலத்தில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது. மேலும், அவரை இந்திய நிர்வாக சேவையிலிருந்தும் (ஐஏஎஸ்) மத்திய அரசு உடனடியாக நீக்கியது. இதற்கிடையே, டெல்லி போலீஸார் பூஜா மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர். இதனால் தன்னை கைது செய்ய வாய்ப்புள்ளதாக கருதிய அவர், டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி பி.வி.நாகரத்னா அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், “பூஜா கேட்கர் செய்த பெரிய குற்றம் என்ன? அவர், கொலை குற்றத்தில் ஈடுபடவில்லை” எனக் கூறி அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சாலை விபத்து ஒன்றில், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் லாரி உதவியாளர் ஒருவர், முன்னாள் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கரின் புனே வீட்டிலிருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். மீட்கப்பட்ட லாரி உதவியாளர், துர்பே மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தில் (MIDC) பணி செய்யும் 22 வயது பிரஹ்லாத் குமார் எனத் தெரிய வந்துள்ளது. அவர், நேற்று மாலை லாரி ஓட்டுநர் சந்த்குமார் அனில் சவானுடன் சென்று கொண்டிருந்தபோது, அவர்களது வாகனம் கார் ஒன்றின் மீது லேசாக மோதியது. அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் அனில் சவானைப் பின்தொடரச் சொல்லிவிட்டு, பிரஹ்லாத் குமாரைக் கடத்திச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்துவதற்காக, புனேவுக்குச் சென்றனர். அங்கு நவி மும்பை காவல் குழு ஒரு குடியிருப்பு சங்கத்திற்குள் கடத்தப்பட்டதாக சொன்ன கார் நிறுத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்து உதவி காவல் ஆய்வாளர் டி.பி. காரத், “வாகனத்தின் பதிவு விவரங்கள் பூஜா கேட்கருக்குச் சொந்தமான ஒரு பங்களாவின் முகவரிக்கு எனத் தெரிய வந்தது. பங்களாவுக்குள், கேட்கரின் தாயாரைக் கண்டோம். பின்னர் அந்த வீட்டிலிருந்து குமார் மீட்கப்பட்டார். கேட்கரின் தாயார் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவர் ரபாலே காவல் துறை முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார். கேட்கருக்கும் அடையாளம் தெரியாத குற்றம்சாட்டப்பட்டவருக்கும் இடையிலான தொடர்பை போலீசார் இன்னும் வெளியிடவில்லை. மேலும், இதுதொடர்பாக பூஜா கேட்கரும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.