டெல்லி கார் வெடிப்பு | ”சதிக்குப் பின்னால் உள்ளவர்கள் தப்ப முடியாது” - பிரதமர் மோடி
”கார் விபத்தின் சதியின் புலனாய்வு நிறுவனங்கள் கண்டுபிடிக்கும். அதன் பின்னால் உள்ளவர்கள் தப்பிக்க முடியாது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே மாலை 6.52 மணியளவில் HR26 CE 7674 என்ற பதிவு எண் கொண்ட ஒரு வெள்ளை ஹூண்டாய் i20 ரக கார் வெடித்துச் சிதறியது. அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் கார் வெடித்ததும் அலறியடித்து தப்பியோடினர். வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தைச் சுற்றி இருந்த 10க்கும் மேற்பட்ட கார்களும் தீப்பற்றி எரிந்தன. இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் வெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, வெடிப்பில் தொடர்புடைய கார், காஷ்மீரைச் சேர்ந்த ஒரு மருத்துவருடையது என்றும், ஃபரிதாபாத்தில் ஒரு பெரிய வெடிபொருட்கள் குவியல் கைப்பற்றப்பட்டதில் தொடர்புடைய பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடையது என்றும் புலனாய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக, அனைத்துக் கோணங்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். விசாரணை முடிவுகளை மக்களிடம் தெரிவிப்போம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில், ”கார் விபத்தின் சதியின் புலனாய்வு நிறுவனங்கள் கண்டுபிடிக்கும். அதன் பின்னால் உள்ளவர்கள் தப்பிக்க முடியாது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பூட்டானுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் முன்னாள் மன்னரின் 70வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “நான் கனத்த இதயத்துடன் இங்கு வந்துள்ளேன். நேற்று மாலை டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரின் இதயங்களையும் பாதித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன். இன்று, முழு நாடும் அவர்களுடன் நிற்கிறது. இந்த சதியின் காரணத்தைப் புலனாய்வு நிறுவனங்கள் கண்டுபிடிக்கும். அதன் பின்னால் உள்ளவர்கள் தப்பிக்க முடியாது. நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.

