பிரதமர் மோடி செல்ஃபி பாயிண்டுகள்.. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

மத்திய ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பிரதமர் மோடி செல்ஃபி பாயிண்டுகளின் மூலம் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
கார்கே
கார்கேpt web

மத்திய ரயில்வே துறை மும்பை, புஷாவல், நாக்பூர், புனே, சோலாபூர் என ஐந்து மண்டலங்களில் கிட்டத்தட்ட 50 ரயில் நிலையங்களில் செல்ஃபி பாயிண்டுகளை வைத்துள்ளது. இந்த 50 ரயில் நிலையங்களில் தற்காலிக செல்ஃபி பாயிண்டுகள் 30 இடங்களிலும், நிரந்தர செல்ஃபி பாயிண்டுகள் 20 ரயில் நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மஹாராஷ்ட்ரத்தை சேர்ந்த அஜய் பாசுதேவ் போஸ், என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மத்திய ரயில்வே முழுவதும் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள 3D செல்ஃபி பூத்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பியுள்ளார். அஜய் பாசுதேவ் போஸ் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி என தெரிகிறது.

இந்த மாதம் 21 ஆம் தேதி அஜய் பாசுதேவ் விண்ணப்பத்திற்கு பதில் அளிக்கப்பட்டிருந்தது. அதில் மத்திய ரயில்வேயின் கீழ் நிறுவப்பட்ட செல்ஃபி பூத்களில், தற்காலிக பூத்களுக்கு தலா 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், நிரந்தர செல்ஃபி பாயிண்டுகளுக்கு தலா 6 லட்சத்து 25 ஆயிரம் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்தான தகவல்கள் தெரியவந்த உடன், மக்களின் வரிப்பணத்தை பாஜக வீணடிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இது குறித்து கூறுகையில், “மோடியின் அரசாங்கம் சுய விளம்பரத்திற்கு எல்லையே இல்லை. வறட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. எதிர்க்கட்சி மாநிலங்களுக்கான நிதியும் நிலுவையில் உள்ளது. ஆனால் இது போன்ற தேவையற்ற விஷயங்களில் பணத்தை செலவிட்டு வருகிறது. தனது தேர்தல் ஆதாயத்துக்கு மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சசி தரூர் இது குறித்து கூறுகையில், “நேர்மையான வரி செலுத்துவோரின் பணத்தில் பிரதமரும், ஆளும் அரசும் சுயவிளம்பரம் செய்வது என்பது அப்பட்டமான துஷ்பிரயோகம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com