”உங்கள் செல்வத்தை இஸ்லாமியர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிடுவார்கள்” - பிரதமர் மோடி சர்ச்சை பேச்சு!

”நாட்டில் ஊடுருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் பங்கிட்டுக் கொடுத்துவிடும்” எனப் பிரதமர் மோடி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மோடி, மன்மோகன் சிங்
மோடி, மன்மோகன் சிங்pt web

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடி

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு 88 தொகுதிகளில் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துவருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்டத்தின் வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம்கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிலையில், ராஜஸ்தானில் பிரசாரம் மேற்கொண்ட மோடி, ”நாட்டில் ஊடுருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் பங்கிட்டுக் கொடுத்துவிடும்” எனப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

“காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது,​​ தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன்பொருள், அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா?

பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. அப்படியென்றால், உங்கள் வளங்கள் யாருக்குப் போகப்போகிறது. இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக்கூட விட்டுவைக்காது” எனப் பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மோடியின் இந்தக் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: பூச்சிக்கொல்லி மருந்து அதிகம்.. ஆய்வில் தகவல்.. எவரெஸ்ட் மீன் மசாலாவைத் தடை செய்த சிங்கப்பூர்!

மோடி, மன்மோகன் சிங்
”மக்களை சந்திக்க முடியாதவர்கள்..” - சோனியா காந்தியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி!

பதிலடி கொடுத்த காங்கிரஸ்

இதுகுறித்து காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளத்தில், “முதல்கட்ட வாக்குப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, நரேந்திர மோடியின் பொய்களின் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது. பயத்தின் காரணமாக, அவர் இப்போது பொதுமக்களின் கவனத்தைப் பிரச்னைகளில் இருந்து திசைதிருப்ப விரும்புகிறார். காங்கிரஸின் புரட்சிகர தேர்தல் அறிக்கைக்கு இப்போது நாடு முழுவதும் ஆதரவு வரத் தொடங்கிவிட்டது. இந்த நாடு அதன் பிரச்னைகளில் வாக்களிக்கும். அதன் வேலைவாய்ப்பு, அதன் குடும்பம் மற்றும் அதன் எதிர்காலத்திற்காக வாக்களிக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக காங்கிரஸின் மூத்த தலைவர் பவன் கேரா, ”காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இந்து அல்லது முஸ்லீம் என்ற வார்த்தை எங்காவது எழுதப்பட்டுள்ளதா” என்பதைக் காட்டுமாறு பிரதமருக்குச் சவால் விடுத்துள்ளார். அவர் மேலும், "இதுபோன்ற சிந்தனைதான் உங்கள் மனநிலையிலும், உங்கள் அரசியல் விழுமியங்களிலும் இருக்கிறது. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், பழங்குடியினர், நடுத்தரவர்க்கம் மற்றும் தொழிலாளர்களின் நீதியைப் பற்றித் தான் நாங்கள் தேர்தல் அறிக்கையில் பேசினோம். அதையும் எதிர்க்கிறீர்களா?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “Rest in Peace....Election Commission of India?” எனப் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மோடி ஜி கூறியது வெறுப்புப் பேச்சு மட்டுமல்ல, கவனத்தைத் திசைதிருப்பும் நன்கு சிந்திக்கப்பட்ட சூழ்ச்சியும் கூட. அதிகாரத்திற்காக பொய் பேசுவதும், ஆதாரமற்ற விஷயங்களைப் பேசுவதும், எதிரிகள் மீது பொய் வழக்கு போடுவதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் பயிற்சியின் சிறப்பு. இந்திய வரலாற்றில் மோடி அளவுக்கு எந்த பிரதமரும் தனது பதவியின் கண்ணியத்தை குறைத்ததில்லை” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

i-n-d-i-a கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “பிரதமர் மோடியின் பொய்கள், மன்மோகன் சிங் பற்றி பொய்களை பரப்பிய விதம், கேவலமான அரசியலுக்கு உதாரணம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: மசூதியை நோக்கி அம்புவிடும் சைகை சர்ச்சை... வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளரை புறக்கணித்த மக்கள்! #Video

மன்மோகன் சிங் பேசியது என்ன?

பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான திட்டங்களுடன் இணைத்துப் பேசப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துவந்து தவறான பிரசாரத்தை மோடி முன்வைத்திருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்pt web

இதுகுறித்து அப்போது மன்மோகன் சிங், ”பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும்” என்றே அவர் பேசியதாகவும் காங்கிரஸ் தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: “என் மனைவி உணவில் டாய்லெட் கிளீனர்” - குற்றஞ்சாட்டிய இம்ரான் கான்; பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு!

மோடி, மன்மோகன் சிங்
"மோடி ஆட்சியில் ரயிலில் செல்வதே தண்டனைதான்"- எம்.பி.ராகுல் காந்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com