”பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும்” - பிரதமர் மோடி அறிவுரை! சொல்லும் செய்தி என்ன?
மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்களால் ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. பாரசீக வளைகுடாவை சர்வதேச சந்தைகளுடன் இணைக்கும் ஹார்முஸ் நீர்வழிப்பாதை வழியாகவே உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் கிட்டத்தட்ட 20 சதவீதம் செல்கிறது.
இப்பகுதியில் பல வாரங்களாக நீடிக்கும் மோதலும் நிலையற்ற தன்மையும் கப்பல் போக்குவரத்தைச் சீர்குலைத்து, சரக்கு நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தி, எண்ணெய் டேங்கர்களுக்கான காப்பீடு மற்றும் போக்குவரத்துச் செலவுகளைக் கடுமையாக அதிகரித்துள்ளன. இதனால், இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தட்டுப்பாடு அதிகரித்திருப்பதுடன் கடுமையான விலையயும் மத்தியரசு உயர்த்தியிருக்கிறது. இதன் காரணமாக, ஹோட்டல்களை மட்டுமே நம்பி சென்னை போன்ற பெருநகரங்களில் வேலை செய்து வரும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்தசூழலில் தான், நாட்டின் நலன் கருதி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எண்ணெய் பயன்பாட்டை பொதுமக்கள் குறைக்க வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து, தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க இந்தியர்களுக்கு பெரும் சுயக்கட்டுப்பாடு அவசியம் என்று குறிப்பிட்டார். மேலும், எரிபொருளை சேமிப்பதற்காக அலுவலகப் பணிகளுக்குப் பயணம் செய்வதைக் குறைக்கும் வகையில், மீண்டும் "வீட்டிலிருந்தே வேலை" செய்யும் முறையைப் பின்பற்றுமாறு நிறுவனங்களையும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து, தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் உள்நாட்டு சுற்றுலாக்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்திய பிரதமர் மோடி, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க, திருமணங்களுக்காக தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தள்ளிப்போடுமாறும் வலியுறுத்தியுள்ளார். பிரதமரின் இந்த அறிவுறுத்தல் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

