முதல்வர் யார்.? கேரளத்தில் நீடிக்கும் குழப்பம்.. ராகுல்காந்தி அதிருப்தி!
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல், ஏப்ரல் 9, 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில், மே 4-ம் தேதி 5 மாநிலங்களுக்குமான தேர்தல் முடிவுகள் வெளியானது. அதன்படி, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மட்டும் முந்தையே அரசே தொடரும் நிலையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்றிருக்கிறது. அதன்படி, கேரளாவில் 10 ஆண்டுகள் ஆட்சி செய்த இடது முன்னணி கூட்டணியை வீழ்த்தி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி வெற்றி பெற்றிருக்கிறது. 102 என்ற பெரும்பான்மையை காங்கிரஸ் பெற்றிருந்தாலும், முதல்வராவதில் போட்டி நிலவி வருவதால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
கேரளத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 6 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் புதிய முதல்வர் யார் என்பது அங்கு தெரியாதநிலை தொடர்கிறது. காங்கிரஸ் கூட்டணியில் முதல்வர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் இடையே கடும்போட்டி நிலவுகிறது. முதல்வரை தேர்வு செய்வது குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வீட்டில் 3 மணி நேரம் நடந்த ஆலோசனையில் முடிவு எட்டப்படவில்லை.
இதற்கிடையே முதல்வர் போட்டியில் உள்ள 3 பேருக்கும் ஆதரவாக கேரளத்தில் சாலைகள், பொது இடங்களில் பதாகைகள் ஏராளமாக வைக்கப்பட்டுள்ளன. இப்பதாகைகள் தலைமைக்கு அளிக்கப்படும் மறைமுக நெருக்கடியாக கருதப்படும் நிலையில் ராகுல் காந்திக்கு கடும் அதிருப்தி அளித்துள்ளது. இதையடுத்து அவர் ஆணைப்படி பதாகைகளை அகற்ற 3 தலைவர்களும் தொண்டர்களுக்கு கூட்டாக வேண்டுகோள் வைத்துள்ளனர்.

