பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு.. 26 பேர் உயிரிழந்த துயரம்.. ஆறாத வடுக்கள்!
பஹல்காம் அருகிலுள்ள ‘மினி சுவிட்சர்லாந்து’ பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று ராணுவ சீருடை அணிந்த மூன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் தொழிலாளி உள்பட 26 பேர் பலியான துயர சம்பவம் இன்று ஓராண்டை எட்டுகிறது. உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், காஷ்மீர் சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் அருகில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு 'மினி சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படுகிறது. இந்த சுற்றுலாத் தளத்தில், கடந்த ஆண்டு ஏப்ரல் 22, மதியம் சுமார் 1:00 மணியளவில், ராணுவ சீருடை அணிந்த மூன்று பயங்கரவாதிகள் அடர்ந்த காட்டுப் பகுதியிலிருந்து வெளிப்பட்டு சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு உள்ளூர் தொழிலாளி என மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக இந்தியா அடையாளம் கண்டது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தானுக்குள் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய அரசு அறிவித்தது, பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது, இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் என்ற அச்சம் நிலவிய நிலையில் மே 10ஆம் தேதி சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஜூலை 28, 2025 அன்று 'ஆபரேஷன் மகாதேவ்' நடவடிக்கை மூலம் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய அரசு அறிவித்தது. பாயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக பஹல்காமில் நினைவுச் சின்னம் நிறுவப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காஷ்மீரின் சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் ராணுவத்தினரும் உயிரிழந்தவர்களுக்குத் தங்கள் அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

