பிரதமருக்கு ஊறு விளைவிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்.. சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டு!
பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவையில் ஊறு விளைவிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டு இருந்தார்கள் என சபாநாயகர் ஓம் பிர்லா அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இத்தகைய ஆபத்தான சூழலால் பிரதமர் மோடி மக்களவைக்கு வர வேண்டாம் என தான் கேட்டுக் கொண்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவையில் ஊறு விளைவிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டு இருந்தார்கள் என சபாநாயகர் ஓம் பிர்லா அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மக்களவையில் நேற்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதில் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி பிரதமர் இருக்கைக்கு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை சபாநாயகர் ஓம் பிர்லா சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் இருக்கை அருகே பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஊறு விளைவித்திருந்தால், அதன் விளைவுகள் விபரீதமாக இருந்திருக்கும் எனவும் சபாநாயகர் ஓம் பிர்லா இன்று மக்களவையில் பேசினார். இத்தகைய ஆபத்தான சூழலால் பிரதமர் மோடி மக்களவைக்கு வர வேண்டாம் என தான் கேட்டுக் கொண்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். பல மகளிர் மக்களவை உறுப்பினர்கள் பிரதமர் இருக்கை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தியதை அவர் சுட்டிக்காட்டி, தனக்கு கிடைத்த தகவல்படி பிரதமருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தது என குறிப்பிட்டார்.
சபாநாயகர் ஓம் பிர்லா எந்த மக்களவை உறுப்பினரையும் பெயரை குறிப்பிட்டு குற்றம்சாட்டாத நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜோதிமணி மற்றும் சுதா ஆகியோர் பிரதமர் இருக்கை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் அடக்கம் என பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். பல மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் இருக்கை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாஜகவின் கங்கணா ரணாவத் குறிப்பிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி 3 மகளிர் உறுப்பினர்கள் அங்கே நின்றதால் பிரதமர் பயந்துவிட்டாரா என கேள்வி எழுப்பினார். பிரதமர் ஏன் மக்களவைக்கு வரவில்லை என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல், சபாநாயகர் ஓம் பிர்லா மூலமாக இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு நூலை மேற்கோள் காட்டி லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறல் செய்தது குறித்து பேச அனுமதிக்க சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜகவின் நிஷிகாந்த் தூபே பல நூல்களை மேற்கோள் கட்டி, மறைந்த ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோர் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைக்க அனுமதித்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.
நிஷிகாந்த் தூபேவுக்கு எதிராக சபாநாயகர் ஓம் பிர்லா அறையில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அங்கு மாண்புடன் நடந்து கொள்ளவில்லை என எதிர்க்கட்சி எம்பிகள் குறித்து சபாநாயகர் வருத்தம் தெரிவித்தார். பிரதமருக்கு ஊறு விளைவிக்கும் சதி மற்றும் சபாநாயகர் அறையில் மரியாதை குறைவாக நடந்தது ஆகியவை மக்களவை வரலாற்றில் கருப்பு புள்ளி என சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையில் பேசினார். அசம்பாவிதத்தை தடுக்கவே நான் பிரதமர் அவைக்கு வர வேண்டாம் என கோரிக்கை வைத்தேன் எனவும் பிரதமர் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி எனவும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்வது நம் கடமை என சபாநாயகர் வலியுறுத்தினார். மக்களவைக்கு பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்களை கொண்டு வர வேண்டாம் என ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்தார். பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் அவைக்குள் கொண்டுவரப்பட்டால், அவையை நடத்த இயலாது என அவர் தெரிவித்தார். அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டுகளுக்கு பிறகு, சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைத்தார். இந்த சர்ச்சை காரணமாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் எஞ்சியுள்ள வேலை நாட்களிலும் மோதல் போக்கு நிலவும் என கருதப்படுகிறது

