புதிய சாதனை: 9 ஆவது முறையாக பிகார் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார்!

பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். காலை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் மாலை மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
நிதிஷ்குமார்
நிதிஷ்குமார்pt web

பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து மீண்டும் வெளியேறுவார் என வதந்தி பரவிய நிலையில், இன்று காலை பிகார் மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதன் பின் பாஜக ஆதரவுடன் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். 9 ஆவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார் நிதிஷ்குமார்.

முதல்வராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றதும் ஜெய் ஸ்ரீ ராம் என பாஜகவினர் கோஷம் இட்டனர். நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜகவைச் சேர்ந்த 2 பேர் துணைமுதல்வர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

நிதிஷ்குமாரை தொடர்ந்து 8 பேர் மாநில அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். பாஜகவில் 3 பேரும் ஐக்கிய ஜனதா தளத்தில் 3 பேரும், சுயேட்சை ஒருவரும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவில் ஒருவரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

பீகார் மாநிலம் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளை உடையது. இதில் பெரும்பான்மை கொண்டு ஆட்சி அமைக்க 122 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதில் ஆட்சியில் இருந்த மகாகத்பந்தன் கூட்டணி மொத்தமாக 159 இடங்களைக் கொண்டிருந்த நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 79 இடங்களையும், ஐக்கிய தனதா தளம் 45 இடங்களையும், காங்கிரஸ் 19 இடங்களையும், இடது சாரிகள் 16 இடங்களையும் தன்வசம் வைத்திருந்தன. எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்த பாஜக 78 இடங்களையும் ஹெச் ஏ எம் 4 இடங்களையும் கொண்டிருந்தது

இந்நிலையில் தற்போது நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து, பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதன்மூலம் இதுவரை ஆளும் தரப்பாக இருந்த கூட்டணியின் பலம் தற்போது 114 ஆக குறைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 127 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com