ஹேப்பி நியூஸ்.. புதிய ட்ரோன் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு!
புதிய ட்ரோன் கொள்கையை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ட்ரோன் பைலட் என்ற அந்தஸ்துடன் ட்ரோன்களை இயக்குவதற்கான உரிமம்பெற, இதுவரை பாஸ்போர்ட் கட்டாய அடையாளச் சான்றாக இருந்து வந்தது. அதை எளிதாக்கி அரசு வழங்கும் ஏதாவது ஒரு அடையாள அட்டை மற்றும் அரசு அங்கீகரித்த முகவரி ஆவணம் இருந்தால் ட்ரோன் பைலட் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சட்டத்திருத்தம் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவை அடையாள மற்றும் முகவரி ஆவணங்களாக கருதப்படும். இவற்றைக் கொண்டு ரிமோட் ட்ரோன் பைலட் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் மட்டுமே அடையாள ஆவணமாக இருந்ததால், விவசாயப் பணிகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்துவது உட்பட ட்ரோன் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட பலர் விண்ணப்பிக்க முடியாத நிலை இருந்ததை மாற்றி, இந்தியாவை ட்ரோன்களின் மையமாக 2030ஆம் ஆண்டுக்குள் உருவாக்கும் நோக்கில் புதிய ட்ரோன் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், 2 கிலோ எடைக்குள் ட்ரோன் இயக்க எளிதாக சான்றிதழ் பெற முடியும்.