மும்பை தாக்குதல்| இந்தியாவில் விசாரணை எதிர்கொள்ளும் தஹாவூர் ராணா.. பாகிஸ்தான் ரியாக்ஷன் என்ன?
டெல்லியில் பலத்த பாதுகாப்பு
அமெரிக்காவிலிருந்து தனி விமானம் மூலம் மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா இன்று மாலை அழைத்து வரப்பட உள்ள நிலையில், டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள உயர் பாதுகாப்பு கொண்ட திகார் சிறையில் அடைக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், தஹாவூர் ராணாவிடம் டெல்லியில் வைத்து விசாரணை நடைபெற உள்ள நிலையில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஆவணங்கள் மும்பையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே தஹாவூர் ராணா மீதான வழக்கில் வாதாட அரசுத் தரப்பு வழக்கறிஞராக நரேந்தர் மான் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்விசாரணையில் மும்பை தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பு உள்ளிட்ட புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் என்ன சொல்கிறது?
இந்நிலையில், தங்களுக்கும் ராணாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கனடா குடிமகன் என்றும் பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷஃப்கத் அலி கான், ”ராணா காலாவதியான குடியுரிமை விவரங்களைப் புதுப்பிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தஹாவூர் ராணா இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது பாகிஸ்தான் ஆவணங்களைப் புதுப்பிக்கவில்லை. அவரது கனேடிய குடியுரிமை மிகவும் தெளிவாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் தஹாவூர் ராணாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பு குறித்து இந்தியா விசாரிக்கும் என தகவல் வெளியான நிலையில் இவ்விளக்கம் வெளியாகியுள்ளது.
2008 - மும்பை தாக்குதலும், தஹாவூர் உசேன் ராணாவுக்கான தொடர்பும்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் தாஜ் ஓட்டல், ஒபேராய் ஓட்டல், நரிமன் இல்லம், சிஎஸ்எம்டி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தில் அமெரிக்கர்கள் 6 பேர் உள்பட 166 பேர் பலியானார்கள். எனினும் இத்தாக்குதலில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், அஜ்மல் கசாப் என்ற ஒரு தீவிரவாதி மட்டும் பிடிபட்ட நிலையில், பின்னர் அவனுக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இந்தச் சம்பவத்தில், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவரும் கனடா குடியுரிமை பெற்றவருமான தஹாவூர் உசேன் ராணா, தீவிரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2009ஆம் ஆண்டு அமெரிக்க போலீசரால் கைது செய்யப்பட்ட அவர், அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்காவிடம் மத்திய அரசு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப்பை, இந்திய பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் போய்ச் சந்தித்துப் பேசினார். அப்போது தஹாவூர் ராணாவை நாடு கடத்த ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்தார். இதற்கிடையே ராணா தாக்கல் செய்த மனுக்களையும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இந்த நிலையில்தான் அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.