மகளிர் இடஒதுக்கீடு மசோதா: “இந்தியில் பேசினால் எனக்கு புரியாது” - கோஷத்துக்கு கனிமொழி MP ரிப்ளை!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
அதில் திமுக எம்.பி. கனிமொழி உரையாற்றினார். அவர் பேசுகையில், “1996 ஆம் ஆண்டு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா திமுக ஆதரவுடன் கொண்டு வரப்பட்டது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வர ஏன் இவ்வளவு காலதாமதம்? மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்காக பலமுறை நான் கேள்வி எழுப்பியும் பதில் தரப்படவில்லை. அனைத்து கட்சிக் கூட்டத்திலும் தெரிவிக்கவில்லை; ஆனால் எங்கள் முன்னுள்ள கணினியில் திடீரென தகவல் வந்தது எப்படி? எப்போது மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்படும்?” என்றார்.
மேலும், பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியாரின் வரிகளைக் குறிப்பிட்டு பேசினார்.

முன்னதாக எம்.பி. கனிமொழி பேசத்தொடங்கும் முன் பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பேசிய கனிமொழி “இந்தியில் பேசினால் எனக்குப் புரியாது” என்றார். தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலுக்கு தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்த பின் கனிமொழி பேசினார். இதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.